ஸ்ரீராம்
சென்னை
ஸ்ரீராம்
சென்னை
நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?
காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்த வினோத் அப்பாவைப் பார்த்துச் சிரித்தான். பாலாஜியிடம் மரியாதையாய் கைகொடுத்தான்.
"என்னப்பா சொல்றா வினோ?"
"சாயங்காலம் நாம பேசிட்டு வந்த இந்த நேரத்துக்குள் எவ்வளவு விஷயம்... நீ ஏண்டா இதை என்கிட்டே சொல்லலை?"
"சும்மா ஒரு சுவாரஸ்யம்தான்பா..."
"கல்யாண நாள் கூட பார்த்திருப்பீங்க போல... எனக்கு அழைப்பு உண்டா?"
"அப்பா... இதான வேணாங்கறது... உன் ட்ரேட் மார்க் பேச்சை பேசறே பார்த்தியா?"
"உன் தம்பிக்கு அம்மாக்கு இதெல்லாம் தெரியுமா?" மூர்த்தி கேட்டார்.
வினோத் பேசவில்லை. வினோதினி பேசினாள்.
"அங்கிள்.. நீங்க கோபப்படக் கூடாது... உங்க கோபத்துல அர்த்தம் இருக்கு.. ஒத்துக்கறேன்... ஆனா யோசிச்சுப் பாருங்க... திடீர்னு ஒருநாள் நல்ல விஷயம் முடிவானா நல்லதுதானே? இப்போ பாருங்க எங்களுக்கே முப்பது நடக்குது... இவனுக்கு முடிஞ்சாதான் ரவிக்கும் வழி கிளியராகும். அவனுக்கும் 28 ஆகுது.."
"ஓ... அவனுக்கு வழி கிளியராகணும்தான் நீங்க அவசர ஸ்டெப் எடுக்கறீங்களா? உங்க அவசரத்துக்கு அவன் பெயரைச் சொல்றீங்களாக்கும்... நான் சொல்றப்பல்லாம் ஒண்ணும் தெரியலை... அவன் உங்களைத் தூண்டி விட்டிருக்கானா?"
"அவனுக்கும் எங்க விஷயம் தெரியும் அங்கிள்... அங்கிள்... பீ பிராக்டிகல்... அவனுக்கு தெரியாம இருக்குமா?"
"எது? இப்போ பேசறது கூட அவனுக்கும் தெரியுமோ? அவன் என்ன குண்டு வச்சிருக்கானோ?"
வினோதினி வினோத்தையும், தன் அப்பாவையும் பார்த்தாள்.
முதல் முறையாக அவளிடம் ஒரு தயக்கம் தெரிந்தது.
"ஆமாம் அங்கிள்... அவனும் ஒரு... ஒரு... அவனும் ஒரு பொண்ணை விரும்பறான்."
மூர்த்தி இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டார். இன்னும் என்னென்ன விஷயங்கள் இந்த மாலையில் நாம் சந்திக்க இருக்கிறோமோ என்று அயர்ந்தார்.
இடையில் வினோத் தனக்கும் பாலாஜிக்கும் ஏதோ ஆர்டர் கொடுத்திருக்க சர்வர் வந்து வைத்துச் சென்றார்.
"அங்கிள்... நீங்க எதிர்பார்க்கற குண்டு அங்கதான் இருக்கு. ஸாரி... அவன் விரும்பற பொண்ணு நம்ம பொண்ணு இல்லை... ஆனா ஹிந்துதான். சைவம். போதுமா?"
மூர்த்தி தலைகுனிந்து அமர்ந்தார். எதுவும் பேசத் தோன்றவில்லை. அவருக்கு ரேணுவிடம் பேச வேண்டும் போல இருந்தது. அவளுக்கும் தெரியுமா இதெல்லாம் என்றும் தெரியவில்லை.
"அங்கிள்..." வினோதினி கைநீட்டி மூர்த்தி கையைத் தொட்டாள்.
"இதுல ஒண்ணுமில்ல அங்கிள்... இப்பல்லாம் இது சகஜம்.. எனக்கு உங்க வருத்தம் புரியுது. ஆனா வேற வழி இல்ல... டேக் இட் ஈஸி அங்கிள்... நாமதான அவங்களுக்கு.. ரவி நம்ம பையன் இல்லையா... அவனுக்குப் பிடிச்சுருக்குன்னு சொன்னப்புறம் நம்மளால என்ன பண்ண முடியும்? அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு... இவன்மேல உயிரையே வச்சுருக்கு..."
திடீரென வினோதினி தன்னைச் சேர்ந்த பெண் போல தோன்றியது மூர்த்திக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்படித் தோன்றும் வகையில் அவள் பேசுவதாகத் தோன்றியது. கொஞ்ச நேரம் அவரவருக்கு எதிரே இருந்ததை மௌனமாகச் சாப்பிட்டார்கள். வினோதினி, வினோத் இருவரும் செல்லை நோண்டிக் கொண்டிருந்தார்கள். பாலாஜி மூர்த்தி முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
"அவங்க எத்தனை நாளாய்ப் பழகறாங்களாம்?"
"அவன் எனக்கெல்லாம் அண்ணன்பா... மூணு வருஷமா பழகறாங்க..."
"என்னது?" மூர்த்தி திகைத்துதான் போனார். அவர் தன் மகன்களுக்கும் தனக்கும் ரகசியம் எதுவும் இருக்காது என்று இதுநாள் வரை நம்பியிருந்தார்.
"அப்போ நாம வீட்டுல பேசி அவனைக் கிண்டல் செய்தது எல்லாம் உண்மைதானா?"
"இல்லப்பா... நாம அல்லது நீங்க சந்தேகப்பட்டு கேட்டது வேற பொண்ணு... இவ வேற பொண்ணு..."
"இதுல இது வேற... ஆனா என்கிட்டே நேரா யாருமே சொல்லலையேடா... நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?" ஆதங்கத்துடன் கேட்டார் மூர்த்தி.
"தெரில்லப்பா... சொல்லலாம்னு எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு தயக்கம் வந்துடும். நாங்க பழகறது சில மாசங்களுக்கு முன்னாலதான் ரவிக்குத் தெரியும். அப்புறம்தான் அவன் விஷயமும் எங்களுக்குத் தெரியும். அதைக்கூட வினோதான் அவன் கிட்டேருந்து தெரிஞ்சுக்கிட்டா..."
அவனே தொடர்ந்தான். "வினோ அவனுக்கு ரொம்ப தைரியம் கொடுத்தா... அந்தப் பொண்ணையும் பார்த்துப் பேசினா... "
"அவங்க அப்பா அம்மா? அவங்களுக்குத் தெரியுமா?"
"வினோ அவங்க கிட்ட அதெல்லாம் போட்டு உடைச்சிட்டா... அங்கே முதலில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. அவங்க அம்மாவுக்குதான் கொஞ்சம் அதிருப்தி இருந்தது. அதையும் வினோ சரிப்படுத்தி சமாதானப்படுத்திட்டா... ரவிக்கும் அவளுக்கும் ரொம்ப சந்தோஷம்..."
"அவ பேரு? ஊரு?"
"அவளையே கேட்டாப் போச்சு... " வினோ கையைத் தூக்க உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். படபடப்புடன் வந்து மூர்த்தியை வணங்கி நின்றாள். பாலாஜியையும் வணங்கினாள். அவள் முகத்தில் தவிப்பும் பதட்டமும் தெரிந்தது. வினோவின் அமைதி அவளிடம் இல்லை.
அந்த மாலையின் நிகழ்வுகளில் நிலைகுலைந்து அமர்ந்திருந்தார் மூர்த்தி. ஏமாற்றமா? அதிருப்தியா? திருப்தியா? மகிழ்ச்சியா? எது தனக்கான உணர்வு என்று தெரியாமல் அமர்ந்திருந்தார். நிச்சயமாக மகிழ்ச்சி ஒன்று இருப்பதை மனம் சொல்லியது.
சர்வர் வந்து அந்தப்பெண்ணுக்கு ஒரு இருக்கை போட்டு விட்டு நகர்ந்தார்.
"இன்ட்ரொட்யூஸ் யுவர்செல்ஃப் சந்தி..." என்றாள் வினோ.
"ஒரு நிமிஷம்..." என்று கையமர்த்தினார் மூர்த்தி. "ரவி இங்கேதான் எங்கேயோ இருக்கான்னு நினைக்கறேன். அவனையும் கூப்பிடு. அப்புறம் யாரு இருக்கா? இந்தப் பொண்ணோட அப்பாவா, அம்மாவா? அவங்களையும் ஒரேயடியா கூப்பிட்டுடு... இவ்வளோ பேரைக் கூப்பிட்ட நீ ரேணுவை மட்டும் ஏன் விட்டே? இல்லை, அவளும் காத்திருக்காளா வெளியே?" குரலில் லேசான கோபமும் இருந்தது.
புன்னகைத்த வினோ செல்ஃபோனை இயக்க, ரவியும், ரேணுவும் உள்ளே நுழைந்தனர். வேறு யாரும் வரவில்லை.
"இந்தப் பொண்ணோட அப்பாம்மா வெளியூர் போயிருக்காங்க... ஆனா அவங்களுக்கு விவரம் தெரியும். (ரேணுவைக் காட்டி) ஆண்ட்டிக்கு சாயங்காலம்தான் அவசரமா கதை வசனம் சொல்லி அழைச்சு வந்திருக்கோம்... ஆண்ட்டி என்ன நினைக்கறாங்கன்னு ஒண்ணும் இன்னும் சரியாச் சொல்லலை... ஓகே, சந்தி... கமான்.."
"என் பேர் சந்தியா அங்கிள்... நான் ரவியை... ரவியை... நான் க்ரூப் டூ பரீட்சை எழுதி பாஸ் பண்ணி கவர்மெண்ட் வேலை பார்க்கறேன். நானும் பீ ஈ தான் படிச்சிருக்கேன். ரவியை நீங்க கவர்மெண்ட் வேலைக்கு போகச் சொன்னீங்களாம். அவர் போகலை. நான் பாஸ் பண்ணி அங்க வேலை பார்க்கறேன். என் அப்பா ஜான்சன் அண்ட் ஜான்சன்ல வேலை பார்க்கறார். அடுத்த வருஷம் ரிடையர் ஆகிறார். எனக்கு ஒரு அக்கா. கல்யாணமாகி வெளிநாட்டுல இருக்காங்க. ஒரு தம்பி. இப்போதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்கான்.. நான் உங்க வீட்டுக்குத் தகுந்த மாதிரி, உங்க மனசு கஷ்டப்படாம நடந்துப்பேன் அங்கிள்..." கடைசி வார்த்தை சொல்லும்போது அவள் குரல் சற்றே இடறியது.
"எங்க மனசு கஷ்டப்படறது இருக்கட்டும்மா... நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் மனஸ்தாபம் இல்லாம இருக்கணும்கறதுதான் முக்கியம். இளமைக் கவர்ச்சில ஆசைப்பட்டுட்டு நடுவுல சண்டை போட்டுட்டு பெத்தவங்களையும் நோகடிக்காம இருந்தா அதுவே போதும்.."
"அங்கிள்..." ஆச்சர்யமாகப் பார்த்தாள் வினோதினி. "அவ்வளவுதானா? ஓகேயா உங்களுக்கு? நான் ரொம்ப எதிர்ப்பு எதிர்பார்த்து நிறைய லெக்சர் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்..."
"வேற வழி? எதிர்த்து ஏதாவது பயன் உண்டா சொல்?" வினோவைப் பார்த்துக் கேட்டார். "ஆனா நான் இதை சுத்தமா எதிர்பார்க்கலை. ரெண்டு பேருமா?"
ரேணு சந்தியாவையும், விநோதினியையும் மாறி மாறிப் பார்த்து எடை போட்டுக் கொண்டிருந்தாள். மூர்த்திக்கு அவள் மேலேயே சந்தேகமாகத்தான் இருந்தது. எல்லோரும் தெரிந்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்களா?
சர்வர் ரேணுவுக்கு காபி மட்டும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார். கட்டளைகள் திட்டமாய் இருந்தன போலும். "இதெல்லாம் ரெண்டு ஞாயித்துக்கிழமையாய் பிளான் பண்ணி பிளான் பண்ணி மிஸ் ஆனது ஸார்.." சர்வர் புன்னகையுடன் சொல்லி விட்டுச் சென்றார். வினோ அவரைப் பார்த்து கைகாட்டிப் புன்னகைத்தாள். ஓ... நாடகத்தில் இவருக்கும் பங்குண்டா?
"என்ன அங்கிள்... ஆண்ட்டிக்கு முன்னாடியே தெரியுமான்னு யோசிக்கறீங்களா? தெரியாது. முன்னாடியே அவர் கிட்ட சொல்லி இருந்தா அவர் உங்க கிட்ட சொல்லாம இருக்கமாட்டாங்கன்னு தெரியும். வினோத், ரவி ரெண்டு பேருமே சொல்லி இருக்காங்க... முதல்ல அவங்க மூலமாத்தான் வர்றதா இருந்தோம். அப்புறம் வினோத் ஆசைப்பட்ட மாதிரி ஒரு சஸ்பென்ஸோட இருக்கணும்னு முடிவு பண்ணினோம். நீங்க இப்படித்தான் வீட்டுல எதற்கெடுத்தாலும் சஸ்பென்ஸ் கொடுப்பீங்களாமே... ஆனா ஒண்ணு அங்கிள்... வினோத் உங்க குணம் பத்தி சொன்னதால தைரியமா இறங்கினேன். ரொம்ப நல்ல அப்பான்னு சொல்வான். இல்லாட்டா ஏடாகூடமா ஆயிடுமோன்னு பயந்தேன்"
"ஐஸ் வைக்காதே... நான் எதுவும் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. எனக்கு வேலையே வைக்கலை. சந்தோஷம்... கல்யாணம் எங்கேன்னு சொல்லுங்க... நானும் வரலாமில்ல?"
"அங்கிள்..." வினோதினி முகத்தில் லேசான வேதனையைக் காட்டினாள்
"ஏம்மா.. ரெண்டு பையனைப் பெத்த அப்பன்காரன் இது கூட பேசமாட்டான்னு நினைக்கறியா?" மனசுல தோணாதா? நான் என்ன விக்ரமன் பட கேரக்டரா என்ன?"
"ஸாரி... அங்கிள்... " வினோ தலைகுனிந்து அமர்ந்தாள்.
மூர்த்திக்கு அவளை அந்நிலையில் பார்க்கப் பிடிக்கவில்லை.
"கல்யாண நாள் பார்த்துட்டீங்களா?" என்றார் மறுபடியும்.
வினோதினி கைப்பைக்குள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அதில் நான்கு தேதிகள் குறிக்கப் பட்டிருந்தன. திகைப்படைந்த மூர்த்தி கோபத்துடன் மகனைப் பார்த்தார்.
"என்ன இது?"
"அங்கிள்... இதெல்லாம் சஜஷன்ஸ்தான். நாம ஒவ்வொண்ணா பேசலாம்..'
"இங்கேயா.. இப்போதா? இப்போதான் தலைகுனிஞ்சு உட்கார்ந்திருந்தே..."
"பின்ன எனக்கும் வருத்தம் வராதா அங்கிள்... அதே சமயம் அதை எல்லாம் பார்த்தா முடியுமா? நாங்க இதற்கு மேலயே பிரச்னை எதிர்பார்த்தோம்... ஸோ... "
"இதோ பாரும்மா.. நாங்க நாளு கிழமை பார்க்கறதுன்னு எப்பவுமே ஒருத்தர் கிட்டதான் பார்ப்போம். எங்க வெல்விஷர் அவர். ... நான் அவரைப் போய்.."
"வைத்தியநாதன் மாமாதான அங்கிள்... அவர் குறிச்சுக்க கொடுத்த நாட்கள்தான் இது..."
மயக்கம் வராத குறை மூர்த்திக்கு.
(தொடரும்)