மணிமேகலை இராஜாராம்
இராமநாதபுரம்
மணிமேகலை இராஜாராம்
இராமநாதபுரம்
வழக்கம் போல பள்ளிக்கூட நாட்களுக்கான பரபரப்பான காலை…
மனீஷாவையும், முத்தழகையும் வேகமாக இழுத்துக் கொண்டு பள்ளிப் பேருந்து நிற்குமிடம் நோக்கி ஓடினேன்.
“உங்க பஸ்சு இன்னும் போகலத்தா…. பதறாம வாங்க” என்று சத்தமாகச் சொன்ன வாசுகி அம்மாள் தனது பேத்திகளுடன் நின்று கொண்டிருந்தார்.
“இப்பத்தான் பெரிய பேத்திக்கு பஸ்சு வந்துட்டு போகுது, சின்னவுகளுக்கு இனிமேத்தேன் வரும்…ஆமா, உங்க பெரிய மக எத்தனாவது படிக்கிறாக…”
“பெரியவுக ஒம்போதாவது படிக்கிறாக… சின்னவுக ஒன்னாவது…”
“ஒம்பதாவதா… அப்ப அவுகளுக்கு இப்பவே பத்தாவது பாடமுல்ல நடத்துவாக. நல்லா கவனமா படிக்கச் சொல்லு… நல்ல மார்க் வாங்கனுமுத்தா’ என்று மனிஷாவைப் பார்த்துச் சொன்னார்.
அப்போது பள்ளிப் பேருந்து வந்தது. இருவரையும் அனுப்பி விட்டு வீடு வந்து சேர்ந்து வீட்டு வேலைகள் பாத்துக் கொண்டே இருந்தாலும், பத்தாம் வகுப்பு பாடங்கள் இப்பொழுதே நடத்த ஆரம்பித்தால், மனீஷாவின் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் என்ன ஆகும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. ‘எதுவாகினும் சந்திப்போம்’ என்று உள்மனம் சொல்லியது.
மாலை பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்கும் போது, வாசுகி அம்மாளிடம் திரும்பவும் கேட்டேன், “எப்படிம்மா சொல்றிங்க… பத்தாவது பாடம்தான் நடத்துவாங்கனு”
“எங்க பெரிய பேத்திக்கி அவுக ஸ்கூல்ல அப்புடித்தானே நடத்துனாக”
“அப்படியா…”
‘அப்ப அவுக ஸ்கூல்ல அப்படி இருக்கும்…மனீஷா ஸ்கூல்ல அந்த மாதிரி இருக்க வாய்ப்பிருக்காது’ என நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
பள்ளிப் பேருந்து வந்தது…
பேருந்தை விட்டு இறங்கி வீடு போகும்வரை மனீஷாவும், முத்தழகும் அன்றைய பள்ளியில் நடந்த விடயங்களை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வருவார்கள், நானும் கதை கேட்பதுபோல கேட்டுக் கொண்டே வந்தேன்.
அப்போது மனீஷா சொன்னாள், ”அம்மா அடுத்த வாரத்திலிருந்து பத்தாப்பு பாடம் நடத்துவாங்களாம்…” என்றதும் என் மன ஓட்டங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெவ்வேறு விடயங்களை பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
வழக்கம்போல அவர்கள் இருவரும் வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருக்க, அவர்களுக்கான தேநீரை உண்டாக்கிக் கொண்டிருக்கும்போது, ‘இந்த ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் முழுமை பெறாமல் போகிறதே எனற எண்ணமும் கவலையும் எனக்குள் இருந்தன. இருந்தாலும், மனீஷாவிடம் மிகுந்த கவனமுடனும், நன்றாக படித்து மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற அறிவுரையை சொல்லிவிட்டு அன்றைய வீட்டுப் பாடத்திற்குள் கரைந்து போனேன்.
அடுத்த வாரம், பத்தாம் வகுப்பு பாடங்கள் பள்ளியில் தொடங்கி மாதாந்திர மாதிரித் தேர்வுகளும் வைக்கத் தொடங்கினர், அதில் மனீஷாவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். அடிப்படையில் அவள் நன்றாக படிக்கும் மாணவிதான் என்றாலும் எப்போதும் கணக்கு பாடத்தில் மட்டும் 70% மதிப்பெண்ணிற்கு மேல் எடுக்கமாட்டாள் என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அவளிடம் காட்டிக் கொள்ளாமல் தேர்வு சமயங்களில் அதிக கவனம் கொடுத்து படிக்கச் சொல்வேன்.
கணக்குப் பாட மதிப்பெண் குறித்து அவளுக்கும் எப்போதும் வருத்தம் இருக்கும். “அம்மா என்னோட ஃப்ரென்ட்செல்லாம் ட்யூசன் படிக்கிறாங்கமா… டியூசன் சாரும் முக்கியமான கேள்விகளெல்லாம் குறித்து கொடுப்பாராம்”என்றாள்.
நான், “உனக்கு முக்கியமான கேள்விகளை நான் குறித்து தர்றேன், கவலைப்படாதே… கவனமா வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை கவனி, மற்றதை பாத்துக்கலாம்” என்று சொன்னேன்.
சில மாதங்கள் கடந்தது, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. அங்கே மனீஷாவின் வகுப்பாசிரியரை சந்தித்து. “சார்…மனீஷா எப்படி படிக்கிறாங்க…” எனக் கேட்டேன்.
“நல்லா படிக்கிறாங்க….”
“கணக்குப் பாடத்தில் மதிப்பெண் குறைவா எடுக்குறாங்களே சார்...”
“பொதுத் தேர்வில் சதம் எடுக்கலைன்னா என் சட்டைய பிடிச்சுக் கேளுங்க மேடம்…” என்று அவர் சொன்னதும் எனக்கு மன வருத்தமாகிவிட்டது.
மனீஷா ஓரளவு நல்லா படிக்கிற மாணவிதான், இதில் நடுநிலையாக படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மனநிலையையும் மன வருத்தங்களையும் நான் அங்கே காண முடிந்தது.
அப்போது எனது அலைபேசி ஒலித்தது…மனீஷாவின் தாத்தாதான்
‘ஹலோ…சொல்லுங்க மாமா”
“என்னமா…மீட்டிங் முடிஞ்சதா?”
“முடிஞ்சதுங்க மாமா…” என ஆரம்பித்து வகுப்பாசிரியர் சொன்னதையும் சொன்னேன்.
“இனிமேல் அவளைப் பற்றி அங்குள்ள வாத்தியார்கிட்ட கேட்க வேண்டாம்.. எம் பேத்தி நல்லா படிச்சிக்கிரும்” என்று சொல்லி, வீட்டு விசயங்களைப் பேசிவிட்டு வைத்தார்.
அதன் பிறகு நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் மதிப்பெண் அட்டையை பார்த்து கையொப்பம் இடுவதோடு சரி! நிறைகுறைகளை நாங்களே சரி செய்து கொண்டோம். மனீஷாவும், தொடர்ந்து நன்றாக படித்தாள்.
கடைசியாக நடந்த பெற்றோர் கூட்டத்தில் கையொப்பமிட்டு வரும்போது ஓரு ஆசிரியர், “மேடம் நீங்க மனீஷா அம்மாவா?” எனக் கேட்டார்.
“ஆமாங்க சார்”
“மனீஷா நல்லா படிக்கிறாங்க மேடம்” என்றதும் அவ்வளவு சந்தோசமாக இருந்தது. காரணம்! ஒவ்வொரு மாதாந்திர தேர்வும் பொதுத்தேர்வு போல கவனம் செலுத்தி படிக்க வைத்தேன். நான் மனீஷாவின் வகுப்பில் மட்டும்தான் அமரவில்லை, மற்றபடி எனக்கு அவளைவிட அழுத்தம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், இந்த உழைப்பிற்கு மற்ற ஆசிரியர்களிடமிருந்து அதற்கான மதிப்பும், ஊக்கமும் கிடைக்காதது மனீஷாவுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது.
எல்லா பாடங்களிலும், 90% மதிப்பெண் எடுக்கும் மனீஷாவுக்கு வகுப்பாசிரியர்களின் அறிவுரையும், ஆலோசனையும் கிடைக்காமல் இருந்ததும் மனதளவில் ஒரு சிறிய கஷ்டமும் இருந்தது. பெற்றோராக நாம் சொல்வதைக் காட்டிலும் ஆசிரியரின் அறிவுரையை அவர்கள் பெரும் ஊக்கமாக நினைத்தனர். தினமும், பிள்ளைகள் பள்ளி முடிந்து வரும்போது அவர்களின் முகமறிந்து ஏதோ நடந்துள்ளது என்று பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
ஒருநாள் வகுப்பில் தேர்வு பேப்பர் கொடுத்ததாகவும், அதில் 99 எடுத்ததாகவும் ம்கிழ்வில்லாமல் கூறினாள்.
“அருமை… அத எதுக்கு கவலயாச் சொல்ற..?”
“இல்லமா… அந்த பேப்பரக் கூட சார் வந்து குடுக்கலமா…”
‘ஏன்? என்னாச்சு..? அப்போ யார் கொடுத்தாங்க..”
“க்ளாஸ் லீடர்கிட்ட கொடுத்து எல்லார்கிட்டயும்…குடுக்க சொல்லிட்டாங்க…”
“அதுக்கு நீ ஏன் வருத்தப்படுற..?”
“அவுங்க எதிர்பார்த்த மாணவ, மாணவி மார்க் எடுக்காம மத்தவங்க எடுத்தா பாராட்டவோ… வாழ்த்து சொல்லவோ அவங்களுக்கு மனம் வருவதில்லமா...” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள்.
‘நாங்களும் நன்றாக கடின உழைப்போடுதானே படிக்கிறோம், எங்களையும் பாராட்டி ஆலோசனைகள் கொடுக்கலாமே..’ என்று ஆதங்கப்படும் மனீஷாவுக்கு நான் என்ன சொல்லி தேற்ற முடியும்..?
அதன் பின்னான சில நாட்களில் மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெறும் மாணவர்களைத் தரம் பிரிக்கும் படலம் நடந்தது. அதில் மனீஷா வகுப்பில் இருந்த 44 மாணவர்களில் 12 மாணவர்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை ஆரம்பித்தனர். அதில் மனீஷாவின் நண்பர்களும் இருந்தனர். அதில் மனீஷா மட்டும் இல்லாதாதை ஒரு கவலையோடு பகிர்ந்த அவளுக்கு எந்த வார்த்தைகளால் சமாதானப்படுத்த முடியும்...?
தினமும் பள்ளி முடிந்து வரும்போது இது பற்றியே பேச ஆரம்பித்தாள். இந்த பிரிவினைகளுக்கு முன்பெல்லாம் மாணவர்களுக்குள் ஆரோக்கியமான பகிர்தலும், நல்ல கலந்துரையாடலும் இருந்தது அவளின் பேச்சில் தெரியும். இப்போது அந்த 12 பேரை பார்க்கவே முடிவதில்லை என்றும், அப்படியே பார்த்தாலும் முன்புபோல நண்பர்கள் யாரும் பேசுவதில்லை என்றும் அவள் குறைபட்டுக் கொண்டாள்.
“அம்மா அந்த 12 பேருகிட்டயும், யாரு கூடவும் பேசக்கூடாதுனும், இங்கு நடத்தும் பாடங்களை மற்ற மாணவர்களோடு பகிர்ந்துக்கக் கூடாதுனும் சொல்லியிருக்காங்கம்மா… அதைவிட இப்ப எங்களுக்கு சார்களும் அதிகமா வர்றதே இல்லமா….”
“சார்க ஏன் வர்றதில்ல….”
“போர்ஷன் எல்லாம் முடிச்சாச்சு… நாளைக்கி டெஸ்ட்டு படிச்சிட்டு வாங்கனு மட்டும் சொல்றாங்க…”
‘சரி…சங்கீதா, காயத்ரி, ராஃபியா யாருமே உங்ககிட்ட பேசுறதே இல்லையா…?”
“ம்ஹூம்… பாத்தாக்கூட யாரையோ பாக்குற மாதிரி பாக்குதுகமா…”
மனதிற்குள், தனியா பிள்ளைகள பிரிச்சு, பாடத்தைவிட வன்மத்த கத்து கொடுத்திருக்காங்களேனு மிக வருத்தமாக உணர்ந்தேன்.
இதைவிட கொடுமை, மனீஷாவின் நண்பர்கள் என்னிடமும் நன்றாக பேசுவார்கள், இந்தப் பிரிவினைகளுக்குப் பிறகு அவ்வப்போது நான் பள்ளிக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அவர்கள் என்னைக்கூட பார்த்தும் பார்க்காதது போல செல்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன், பெற்றோருக்கே இந்த நிலையெனில் வகுப்பில் மற்ற மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினேன். இது இரு நாட்டுப் பிரிவினையைவிட கொடுமையானதாக இருக்குதே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.
அவைகளை கடக்க மனீஷாவிடம் நல்லாப் படி என்பதே என் வார்த்தைகளாக இருந்தது. ஒரு சமயத்தில் அனைத்து குழந்தைகளும், சிட்டுக்குருவிகளின் குடும்பம்போல பாடம் சம்பந்தமான சந்தேகங்களை கலந்து பரிமாறிக் கொண்டதை கண்ட எனக்கு இந்தப் பிரிவினையை காணச் சகிக்கவில்லை.
பிரிவினை இல்லாமல் இருக்கத்தான் அனைவருக்கும் சமமான கல்வி என்பதே.. ‘கல்வி ஒன்றைக் கற்றுக் கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற கல்வியால் பிரிவும் கவலையும் வந்தது வருத்தமே!
நாட்கள் நகர்ந்தன…
அந்த 12 பேர்களின் செயல்பாடுகள் வெகுவாகவே மாறிப் போயிருந்தது. மற்றவர்களை எதிரிகள் போல பார்க்கத் துவங்கினர். அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறியிருந்தது.
ஆசிரியர்களிடமும் அந்த வித்தியாசங்கள் தெரிந்தது. 12 பேர்களைத் தவிர மற்ற மாணவர்களிடம் ஒரு அன்பான பேச்சோ, ஊக்கப்படுத்தலோ இல்லாமல் இருந்தது. மாதாந்திர தேர்வு முடிவு பேப்பர்கள்கூட சம்பத்தப்பட்ட ஆசிரியர்கள் கொடுப்பதில்லை. அவ்வாறு அந்தந்த ஆசிரியர்களே கொடுக்கும்போது அதில் உள்ள பிழை, குறைகளைச் சொன்னால் மாணவர்களுக்கு ஒரு பேருதவியாக இருக்கும்., தவறுகளை சுட்டிக் காட்டும்போது அவர்களும் அதை திருத்திக் கொள்ள வாய்ப்புண்டு என்பதை இந்த ஆசிரியர்கள் உணர்வதில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
பொதுத் தேர்வுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டு இருந்தது, எல்லா மாணவர்களும் படிப்பில் மூழ்கி இருந்தனர். அனைத்து மானவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்ற குறுஞ்செய்திகள் பள்ளியில் இருந்து வரும். ஆனால்! அங்கே நடப்பது வேறாக இருக்கும். முதல் மதிப்பெண் மாணவர்கள் என்ற அந்த 12 பேருக்கு தனியாக வகுப்புகள் நடக்கும்., மற்றவர்கள் அவரவர் படித்துக் கொள்ளவும் என்பார்கள்.
எனக்கு இதில் முரணாக தெரிவது இவர்கள் அனைவருமே நன்றாக படிக்கும் மாணவி, மாணவர்களென 10ம் வகுப்பு ‘அ’ பிரிவு என்று எடுத்த பின்பு இப்போது ஏனிந்த மாற்றம் என்ற கேள்வி எனக்கு இருந்தது.
இந்த சமயங்களில் தினமும் பள்ளியிலிருந்து அலைபேசிக்கு மாதிரி வினா-விடைகள் என PDF வந்த வண்ணம் இருக்கும், அதை உடனுக்குடனே பிரிண்ட் எடுத்து கொடுத்துக் கொண்டே இருப்பேன். மனீஷாவுக்கு நான் இருக்கிறேன் என்ற உறுதுணையாக நம்பிக்கை வார்த்தைகளை கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
பொதுத் தேர்வும் வந்தது, அந்த சமயத்தில் அந்த 12 பேரிலிருந்து ஒரு மாணவி இவற்றையெல்லாம் நன்றாக படித்துக்கொள் என்று ஒருசில குறிப்புகளை அலைபேசி வழி அனுப்பியிருந்தார். ஆனால்! மனீஷா முக்கியமான குறிப்புகளைத் தவிர்த்து அனைத்தையுமே முன்னரே படித்துக் கொண்டிருந்தாள், அதனால் அந்த குறிப்பு பெரிய வித்தியாசத்தைக் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை.
இதில், ஆச்சர்யம் என்னவென்றால் மூன்று தேர்வு முடிந்த நிலையில் அவ்வப்போது நடக்கும் அனைத்து மாணவர்களுக்குமான சிறப்பு வகுப்பில் ஒரு ஆசிரியர் மனீஷாவிடம், ‘நீ அந்த 12 மாணவர்களோடு அமர்ந்துகொள்’ என்று கூறியுள்ளார், முதலில் மறுத்த மனீஷாவை வற்புறுத்தி அமரச் செய்துள்ளார் என்பதை மனீஷா என்னிடம் சொல்லியிருந்தாள், இதெல்லாம் என்ன மனநிலையோ என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
முதல் மூன்று தேர்வுகள் முடிந்த நிலையில், நான்காவது அறிவியல் தேர்வுக்கு முந்தைய நாள் ‘சிறப்பு வகுப்பு நடைபெறும் அனைவரும் வரவேண்டும்’ என்ற குறுஞ்செய்தி ஒன்று பள்ளியில் இருந்து எனக்கு வந்தது.
“அம்மா..நான் வீட்டிலிருந்தே படிக்கிறேன்…” என்ற மனீஷாவிடம், “நமக்காக ஆசிரியர்கள் வருவார்கள், கண்டிப்பாக நீ போகவேண்டும்…” என்று நான் சொன்னதும், “அங்க போனா மன உளைச்சல்தான்மா… பரீட்சை எப்படி எழுதுனேனு அந்த 12 பேர்களிடம்தான் கேட்பாங்க, அவங்கள்ல யாராவது சரியாக எழுதலைனா மற்ற யாரும் சரியாக எழுதியிருக்க மாட்டாங்கனு எங்ககிட்ட கேட்கக்கூட மாட்டாங்கமா…அது மட்டுமில்ல நாளைக்கு ஸ்கூல் பஸ்சு வராதும்மா..”
“அதப்பத்திலாம் நீ யோசிக்காத மனீஷா…காலைல நானே கொண்டு வந்து விட்டுட்டு சாய்ங்காலம் 4 மணிக்கு வந்து கூட்டிக்கிறேன்…” என்றதும் விருப்பமில்லாமல் போன மனீஷாவை வலுக்கட்டாயமாக நாந்தான் அனுப்பி வைத்தேன்.
எனக்கு மதியம் 1 மணிக்கு ஒரு போன் வந்தது, எடுத்துக் ‘ஹலோ….” என்றதும் மனீஷா, “அம்மா க்ளாஸ் முடிஞ்சிருச்சு… வந்து கூட்டிட்டு போங்க…”என்றாள்.
பள்ளிக்குச் சென்ற நான் கலங்கிய கண்களோடு நின்ற மனீஷாவைப் பார்த்துப் பதறிப்போனேன். அவளோ என்னைப் பார்த்ததும் வேகமாக கண்களாய்த் துடைத்துக் கொண்டாள்.
எதுவும் கேட்டுக் கொள்ளாமல் ஆட்டோவில் கூட்டிக் கொண்டு வரும் போது கண்ணீர் துளி வெளிவரத் துடித்த வண்ணம் இருப்பதைப் பார்த்து, “என்னாச்சுமா…” என்றேன்.
“என்னை மட்டும் அந்த 12 பேருடன் ஒரு வாத்தியார் அமரச் சொன்னார்…நானும் அமர்ந்தேன்…ஆனா அவர்கள் யாருமே என்னுடன் பேசல…அவுங்கவுங்க குரூப்பா உட்காந்து படிச்சாங்க சாப்பிடும்போதுகூட நான் தனியா உக்காந்துதான் சாப்பிட்டம்மா… நாந்தான் அப்பவே சொன்னேன்லம்மா வீட்ல இருந்தே படிக்கிறேன்னு…. சயின்ஸ் மிஸ்சு கூட டாப்பரத் தவிர எல்லாரும் வெளிய போங்கனு சொன்னாங்கமா நாங்க என்ன நாயாம்மா….”
என்னிடம் அவளுக்குச் சொல்ல வார்த்தையில்லை, எனக்குள் வந்த அழுகையை மறைக்கும் இடம் ஒரு கையறு நிலைதான்… இதையெல்லாம் அவர்களிடம் கேட்டால், இந்த நேரத்தில் அந்த கோபத்தை மனீஷாவின் பக்கம் திருப்பினால் அது மேலும் மன உளைச்சலைத் தரலாம் என எண்ணத்துடன் அது குறித்து எதுவும் பேசாமல் இனிமேல் எந்த சிறப்பு வகுப்புக்கும் நீ போக வேண்டாம் என்று சொல்லி ஆறுதல் படுத்தினேன்.
கடைசித் தேர்வன்று வகுப்பில் அனைவரும் நினைவுப் புகைப்படம் எடுத்தார்களாம், அது இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும், ஆமாம்! அந்த 12 பேரைத் தனியாகவும் மற்றவர்களைத் தனியாகவும் எடுத்தார்களாம். இதைவிடக் கொடுமை என்ன வேண்டியிருக்கு, பள்ளிகால புகைப்படம் என்பது காலம் கடந்தும் மகிழ்வான நினைவுகளை நமக்குள் மலரச் செய்வது அல்லவா. அதில்கூட அந்தப் பள்ளியில் பிரிவினை என்றதும் வலித்தது.
எல்லாம் முடிந்தது, எத்தனை வலிகள் இருந்தாலும் சிறப்பாக தேர்வு எழுதிய மகிழ்ச்சியை மனீஷா மனதளவில் சுமந்து மகிழ்வாக இருந்தாள். எனக்கு அது போதுமென இருந்தது தேர்வு முடிவுகள் வரும் தேதி அறிவிக்கப்பட்ட போது ஒரு குறிஞ்சிப்பூவின் மலர்ச்சியை அவளின் முகத்தில் பார்த்தேன்.
தேர்வு முடிவுகள் வெளியாகி, ஒவ்வொரு செய்தியாக வரும்போது முதல் 5 மாவட்டத்தில் இராமநாதபுரம் இல்லையென்றதும், “என்னது இராம்நாட் இல்லையா… அப்ப எங்க பள்ளி முதலிடம் இல்லையா… நான் முதலிடம் இல்லையா…” என்று உரத்த குரலில் கேட்டுக் கண் கலங்கினாள்.
சிறப்புப் பயிற்சி எடுத்த பிள்ளைகள் கூட மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடியாமல் போன நிலையில் என் மகள் நான் முதலிடம் பிடிக்க முடியவில்லையே என வருந்தியது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தாலும், கிட்டத்தட்ட பத்து மாதங்களாக பள்ளியில் 12 பிள்ளைகள் தவிர, மற்றவர்களை மாணவர்களாகக் கூட மதிக்காத நிலையில் என் மகள் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் நான்காவது மதிப்பெண் பெற்றது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
(இது உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய சிறுகதை, என் மகளின் மதிப்பெண்ணை ஏதோ பள்ளிக்காக சாதிக்கப் போகும் மாணவர்கள் எனச் சிலரை மட்டும் சிறப்பாகக் கவனித்து, மற்றவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் ஆசிரியர்களுக்கு என் மகளின் மதிப்பெண்களைச் சமர்ப்பணம் செய்கிறேன். இனிமேலேனும் இதுபோல் நடந்து கொள்ளாதீர்கள்… உங்களைப் பொறுத்தவரை எல்லாரும் மாணவர்களே)