சக்தி
அபுதாபி
சக்தி
அபுதாபி
அவனின் மின்னஞ்சல் பெட்டியில் ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது.
தை மாதம் 15ஆம் தேதி, ஸ்ரீ காளயுக்தி ஆண்டு, கலியுகம் 5259. (January 30, 2159)
15 நாட்களுக்கு பின் மின்னஞ்சல்பெட்டியை திறந்து படித்தவன், அந்த மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவன் இருந்தும்,பணி சார்ந்த ஏதோ சில பல கணக்கிலடங்கா எண்ணலைகள் அவனை தாக்க, சட்டென அதை மூடி, படிக்காமல் இருக்கும் மின்னஞ்சல்களின் கோப்புறையில் சேர்த்துவிட்டு, அவனின் மின்னஞ்சல் பெட்டியில் இருந்து வெளிவந்தான்..
அவன் மனதில் ஓடிய எண்ணங்களின் தாக்கம் ஒரு குற்ற உணர்வா, இல்லை.. முடிந்த போன நிகழ்வுகளின் மறுபிறப்பா, இல்லை.. தேவையற்ற எண்ணோட்டங்களா, இல்லை.. வாழ்வியலின் புதிரான தடங்களா, இல்லை.. எதனால் இந்த தயக்கங்கள் எதனால் இந்த தடுமாற்றங்கள் என என்னவென்று புரியாமல் சிந்தித்து சிந்தித்து களைத்தே போனான் தமிழகிலன், வயது 27.
அவனது பெயரிலே தமிழ் இருப்பதால் என்னவோ அவனுக்கும் தமிழுக்கும் எதோ ஒரு புரியாதா உறவு இருப்பதாய் அவன் உணர்ந்து இருக்கவில்லை.. மனித பிறப்புகளின் காரணம் என்னவென்று அறிவியல் ஆயிரம் சொன்னாலும் அந்நியர்கள் ஆயிரம் சொன்னாலும், தானே தேடி அறிந்து கொள்ளாமல், இது தான் காரணம் என்பதை முடிவு செய்வதில் அவனுக்கு சிறிது தயக்கம் தான்..
சின்ன சின்ன விஷயங்களை கூட எவ்வளவு சிறிதாக பிரித்து பார்க்க முடியுமோ அவ்வளவு நுண்ணியமாக துளைத்து தேடுவதும் அவன் தான்.. பெரிய பெரிய சிக்கலான நிகழ்வுகளை கூட சில சமயங்களில், ஒரு பக்கம் அது அதுவாக இருக்கட்டும் என தட்டி கழிப்பதும் அவன் தான். இப்படி ஒரு மனவேறுபாடோடு, தனக்கு என்று எந்த குறிப்பிட்ட லட்சியமும் இல்லாதவன் போல நினைத்து கொள்பவனும் அவனே .. !
இளம் வயதிலே படித்து முடித்தவுடனே அதே தொழிநுட்ப துறையில் இந்தியா பாலைவனத்திற்கு பெயர் போன தார் பாலைவனம் அருகே அமைந்த ஒரு அயல் நாடான ஜோத்புரில் ஒரு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணியில் சேர்ந்தான். வீட்டை விட்டு பக்கத்து தெருவிற்கு சென்றால் கூட அவனுக்கு அது ஒரு அயல் நாடு தான்.
அங்கே அதே துறையில் இலங்கையை பிறப்பிடமாகவும் தமிழை தாய்மொழியாகவும் கொண்ட செழியன் அகிலனுக்கு அறிமுகமாகி நண்பராகிறார். செழியன் வயதிலும் சரி, தமிழ் மொழி மேல் உள்ள அன்பிலும் சரி, அவனை விட முதுமை தான்.
ஒரு பொருளையோ உயிரையோ உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இது அனைத்திற்கும் பொருந்தும். மனிதனாகட்டும், சிறு சிறு உயிரிகளாகட்டும், இயற்கையாகட்டும், நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களாகட்டும் ஒவ்வொன்றிற்கும் பின்னால் நாம் நினைத்து பார்த்திராத அளவிற்கு எண்ணிலடங்கா உழைப்புகள், இழப்புகள், கற்பனைகள், முயற்சிகள் என மறைந்திருக்கும்.
இப்படி மறைந்து கிடைக்கும் ஒன்றை பற்றிய ஆராய்ச்சியில் இருவரும் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கிடையில் தங்களை மன அழுத்தத்தில் இருந்து தளர்த்தி கொள்ள பொழுபோக்கிற்காக சில பல வழிகளை மேற்கொண்டு வந்தனர்.
அதில் ஒன்று சிறிது நேரமாவது அவர்கள் ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு தலைப்பு பற்றி உரையாட வேண்டும் என்று திட்டத்தோடு செயல் படுத்தியும் வந்தனர். காதல், நட்பு, காலம், கடமை, பொறுமை, பெண்மை, பூக்கள், வெறுப்பு, கோபம், இயற்கை, ஏமாற்றம், வலி , தனிமை, இசை, புகழ், புத்தகம், தமிழ் என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு அவர்களின் உரையாடல்கள்.. நேரம் சிறிதெனினும், விவாதங்கள் ஒன்றும் மறக்கமுடியாத அளவிற்கும் என்றும் நினைவு படுத்தும் அளவில் இருந்தன.. !
இருவரும் உடன் இருந்த நாட்களை விட உருவாக்கிய நினைவுகள் அவர்களின் நட்பிற்கு ஒரு பெரும் ஆதாரமாய் இருந்தன..!
மார்கழி மாதம் 28 ஆம் தேதி, ஸ்ரீ காளயுக்தி ஆண்டு, கலியுகம் 5259.
அன்று இரவில், மரணம் பற்றி விவாதிக்க, அகிலன், " நீங்க மனித பிறப்பு பற்றி என நினைக்கிறீங்க என்று கேட்டான்.. அதற்கு செழியன், என்ன அகிலா நாம இம்புட்டு நேரம் தூங்காம வேலை வெட்டி இல்லாம இப்படிலாம் அரட்டை அடிக்க காரணமே இந்த புரியாத புதிர் தான்..! இதுல என்னத்த விவாதம் பண்ணனும்னு பதில் அளிக்கிறார்.
சரி தான்.! அப்படியாவது கொஞ்சம் துக்கத்துல தூக்கம் வருமேனு தான் கேட்டு வச்சேன்னு அகிலன் புலம்பும் போதே, தூரத்தில் ஒரு விண்கல் வானத்துல இருந்து அவர்களை நோக்கி வருவதை பார்த்து செய்வதறியாமல் இருவரும் அதிர்ந்து நிற்க...
தூக்கத்திலிருந்து சட்டென விழித்தான் அகிலன்.. நடந்து முடிந்தது மறுபடியும் ஏனோ அவனது எண்ணங்களிலும் தொடர சில மணி நேரம் ஆதி அந்தமும் செயலிழிந்தே போனான்.. !
அது ஒரு நிகழுலக கனவா இல்லை கனவுலக நிகழ்வா என யூகிக்க முடியாத அளவில் திணறியே, இன்று வரை அவனால் அதை மறக்கவும் முடியாமல் விட்டு விலகவும் முடியாமல், அதில் தொலைந்த அவனை தேடி கண்டுபிடிக்க முடியாமல் ஆன்ம வலிமை இழந்தே இருந்தான்..!
தை மாதம் 01ஆம் தேதி, ஸ்ரீ சித்தார்த்தி ஆண்டு, கலியுகம் 5260. (January 17, 2160)
மாதங்கள் பல பல உருண்டோட தன் இயல்பற்று நின்ற அவன் எதேச்சையாய் அந்த மின்னஞ்சலை மறுபடியும் திறந்து படித்தான்..
முதலில் படிக்கும் போது அந்த மின்னஞ்சலின் பொருள் அறியாமல் சிந்திக்க மறக்கும் வேளையில், அதில் குறிப்பிட்ட சில குறியீடுகளுக்கும் அந்த விண்கல் அமைப்பிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாய் யூகித்தான்..
அந்த மின்னஞ்சலை பற்றிய எல்லா தகவல்களையும் அவன் அறியவேண்டும் என இறங்கி ஆராய தொடங்கினான்..
ஆராய்ச்சிகளின் இடையே விண்கல் விழுந்த இடம், நேரம் எல்லாம் குறித்த அத்தனையும் மனதில் ஓடிக்கொண்டே இருக்க, அந்த விண்கல்லை பிரித்து பார்த்த போது மூளை தன் இயக்கத்தை சிறிது நொடிகள் மறந்து போன ஓர் உணர்வு..
அது விண்கல் அல்ல.. அது விண்வெளியில் உலவும் ஒரு அதிநவீன செயற்கைகோளின் செயலிழந்த முக்கியமான ஒரு பாகம் என்பதை அந்த மின்னஞ்சலை தொடர்புபடுத்தி தெரிய வந்தான்.. அதனை எவ்வாறு சரி செய்து திருப்பி விண்வெளிக்கே செலுத்த முடியும் என்பதையும் அந்த மின்னஞ்சலில் கண்டு கொண்டான். மின்னஞ்சலில் பதிவிட்டிருக்கும் புரியாத குறியீடுகளை தமிழிலில் மொழிபெயர்க்கும் செயலி ஒன்றையும் உருவாக்கினான்..!
மேலும் இந்த பாகத்தை சரி செய்து திரும்ப அனுப்பிவிட்டால், நீங்கள் கேக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்றும் இதை பற்றி வேறு யாரிடமும் தெரிய படுத்த கூடாது என்றும், அப்படி கூறினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தது..
ஆடி மாதம் 32ஆம் தேதி, ஸ்ரீ துந்துபி ஆண்டு, கலியுகம் 5263. (August 18, 2162)
தன் நீண்ட கால ஆராய்ச்சியிக்கு கிடைக்க போகும் மிக பெரிய வெற்றிக்காகவும் தன்னை முழுதும் அர்ப்பணித்து கடுமையாக உழைத்தான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்..!
திறம்பட அந்த பணியை முடித்த அவனுக்கு சில கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை.. எங்கிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது..? இந்த விண்கல் பற்றியும் அதை சரி செய்வது பற்றியும் எப்படி துல்லியமாக தகல்வல்களை முன்கூட்டியே அனுப்ப முடிந்தது.? அதும் எனக்கு ஏன் வரவேண்டும்..? செழியனை இழக்க அந்த மின்னஞ்சலை நான் கால தாமதமாக படித்ததே காரணமா..?
நான் தான் செழியனை கொன்றுவிட்டேனா ? மனித பிறப்பின் ரகசியம் என்ன..? மரணத்திற்கு பின் புதைந்து கிடைக்கும் ரகசியம் என்ன..?
இப்படி தன்னையே கேட்டுக்கொண்டே அவன், "நலம்.. நலம் அறிய ஆவல்.." என்ற தலைப்பில் வந்த அந்த மின்னஞ்சலுக்கு தன் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் வேண்டுமென கலங்கி பதில் அனுப்பினான்..!
தன் கேள்விகளுக்கு விடைகள் வருமா வருமா என ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் காத்து கொண்டிருந்தான் அகிலன்.. !
அன்றிலிருந்து சிறிய சிறிய அறிகுறிகளை கூட ஆராய தொடங்கினான். செழியனின் நட்பின் ஆழம் இன்னும் அவனை வாட்டி வதைக்க, இனியும் ஒரு உயிரை தன் அலட்சியத்தால் அறிந்தும் அறியாமலும் கூட இழக்க நேரிட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.. !
யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அவனை அணுகும் எல்லா விஷயங்களிலும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க கற்று கொண்டான்.
ஒவ்வொரு மாற்றங்களும் ஒவ்வொரு செய்தியை உள்ளடக்கிருப்பதாய் அறிந்து கொண்டான்.. அவனின் யூகங்கள் அனைத்தும் பெரும்பாலும் சரியாக அமைவதை காத்திருந்து புரிந்து கொண்டான்..!
தன் கற்று கொண்ட அனைத்தையும் மற்றவர்களுக்கு புரியும் வழியில் கற்பித்து கொண்டே வாழ்ந்து வந்தான் அந்த மின்னஞ்சல் தவிர.. !
நலம்.. நலம் அறிய ஆவல் என எந்த செய்தி வந்தாலும் அதை முதலில் திறந்த படித்து சிறிது ஏமாந்தே போனான்.. ஆண்டாண்டுகள் காத்திருந்தான்.. ஏனோ அது ஒரு வடுவாய் அவனில் தங்கி போனது.. !
அவன் வாழ்வியல் மாற்றங்கள் திருமணம், குடும்பம், புது புது நட்புகள் என எல்லாரும் போலவே தொடர்ந்தது.. !
சார்ந்து வாழும் போது தான் நம் சாதனைகள் சாத்தியமாகின்றன. எல்லாம் ஒரு எழுதப்பட்ட சரித்திரமாக வாழ்ந்து கொண்டே தன் கேள்விகளுக்கு பதில் இதுவாக இருக்க கூடுமோ என யூகித்த படியே ஆண்டுகள் கடந்தான் .. !
தை மாதம் 28ஆம் தேதி, கர ஆண்டு, கலியுகம் 5292. (February 13, 2192)
தை அமாவாசை அன்று மனிதனாய் தன் வாழ்வின் இறுதி மணித்துளிகளை எண்ணி கொண்டிருந்தான். தன் இறுதி மூச்சையும் அந்த மின்னஞ்சலின் பதிலுக்காகவே காத்திருந்தான்.. பிறப்பில் தொடங்கிய மனித வாழ்க்கை இறப்பிற்கு பின் எவ்வாறு இருக்க போகிறது என்ற ஒருவித ஆவலும் அவனின் ஆழ்மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.. !
சுவாசம் நின்றும் போனது.. சில மணி நேரங்கள் கழித்து.. அந்த மின்னஞ்சல் அவனின் மின்னஞ்சல் பெட்டியை வந்தடைந்து ...
" நலம்.. நலம் அறிய ஆவல் "
தை மாதம் 29ஆம் தேதி, ஸ்ரீ காளயுக்தி ஆண்டு, கலியுகம் 5319. (February 13, 2219)
அந்த மின்னஞ்சல் திறக்கப்பட்டது....
அகிலனின் ஆராய்ச்சியை பல வருடங்கள் கழித்து தொடரும் மகிழொளி, அகிலனின் ஆராய்ச்சி பணிகளில் அவர் சேகரித்த ஆதாரங்கள் தடயங்களை, அவரின் மின்னஞ்சல் பெட்டியில் சேமித்த தகல்வல்களை, தகவல் மேலாண்மை மூலம் கிடைக்கப்பெற்று ஆராய்ந்தால் மேற்கொண்டு செயல் பட முடியும் என்ற நம்பிக்கையில் இந்த மின்னஞ்சல் திறக்கப்பட்டது..
அந்த மின்னஞ்சலில் அகிலனின் அத்தனை கேள்விகளும் பதில் வந்திருந்தன அந்நிய குறியீடுகளிலான ஒரு மொழியில்.. அதில் குறிப்பிட்ட பதிவுகளை அகிலனின் மொழிபெயர்ப்பு செயலியின் உதவியில் படிக்க தொடங்கினாள் மகிழொளி..!
மின்னஞ்சலில் குறிப்பிட்டவை அகிலனின் கேள்விகளுக்கு பதில்களாக..
எங்கிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது..? இந்த விண்கல் பற்றியும் அதை சரி செய்வது பற்றியும் எப்படி துல்லியமாக தகல்வல்களை முன்கூட்டியே அனுப்ப முடிந்தது.? அதும் எனக்கு ஏன் வரவேண்டும்..? செழியனை இழக்க அந்த மின்னஞ்சலை நான் கால தாமதமாக படித்ததே காரணமா..? நான் தான் செழியனை கொன்றுவிட்டேனா ? மனித பிறப்பின் ரகசியம் என்ன..? மரணத்திற்கு பின் புதைந்து கிடைக்கும் ரகசியம் என்ன..?
பூமியை போல பல கோடி கிரகங்களை கண்காணிக்கும் ஒரு மைய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உங்கள் சூரிய குடும்பத்திற்கு அருகே உங்கள் சூரிய குடும்ப கிரகங்களின் செயல்பாடுகளை கண்டறியும் கிரக தணிக்கை நிலையங்களின் முதன்மை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி அதுவும் இதுவும்..
உங்கள் கிரங்களின் ஒவ்வொரு அசைவுகளும், ஒவ்வொரு கிரங்களில் உள்ள அத்தனை கிரக வாசிகளின் அசைவுகளும் ஆதவனான சூரிய நட்சத்திரத்தை பொறுத்தே அமையும்..
பூமியில் உள்ள கிரகவாசிகளில் மனிதன் ஒரு ஆதிக்க உயிரினமாக பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு உருப்பெற்றான்.. ஒவ்வோர் கிரக வாசிகளின் கட்டுப்பாடுகள் எங்களால் வரையறுக்கப்படும்.. மனிதன் உருப்பெறும் முன் சுமார் 250 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர் உயிரினங்கள் அந்த கால பொழுதின் ஆதிக்க உயிரினமாக கருதினோம்..
பூமியை உருவாக்கிய காலம் தொட்டு பூமியில் வெல்வேறு கால கட்டங்களில் உருப்பெற்று வாழும் ஒவ்வொரு உயிரினங்களையும் கண்காணித்து வருகிறோம். நாங்கள் கட்டமைத்த பூமியை அழிக்கும் சக்தி, அந்த கிரகவாசிகளின் செயல்பாடுகளே பொறுத்தே அமையும். இதில் தற்போது நாங்கள் கருதும் ஆதிக்க உயிரிகள் மனிதர்கள். அவர்களின் பங்கு இந்த பூமியை காப்பதிலும் அழிப்பதிலும் முதன்மையாய் இருக்கும்.. !
250 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர் உயிரினங்கள் வாழ்வியல் முறைகளை தாண்டி மற்ற உயிரிகளிடத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி மற்ற உயிரினங்களிடத்தில் மிக பெரிய இன அழிவையும், அது சார்ந்த இயற்கை மாற்றத்தையும் பூமியில் கொண்ட வந்தன.. இதன் விளைவில் இருந்து பூமியை காப்பதற்க்காக நாங்கள் ஆதிக்க உயிரினத்திடம் பல முறை செய்திகளை அனுப்பியும் எந்த பலன்களும் இல்லை.. !
பூமியை இழக்க கூடாதென எங்கள் மைய செயலகத்திலிருந்து கிடைக்க பெற்ற ஆணையின் பேரில் ஆதிக்க உயிரினங்களை, மிகப்பெரிய விண்கற்களை பூமியில் செலுத்தியும், எரிமலை மற்றும் மின் அதிர்வுகளை உருவாக்கியும் ஒரு பெரிய இன பேரழிவிற்கு வித்திட்டோம்..
இந்த மிக பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் கால இடைவெளிகளில் மிக பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.. அப்படி உருவாக்க பட்ட உயிரினங்களில் மனிதன் ஆதிக்க சக்திகளை கொண்டு விளங்கியதால் அவனை கூர்ந்து கவனித்து வந்தோம்... ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இறப்பும் முடிவு செய்வதை எங்கள் செயலகம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது..
பிறப்புக்கும் இறப்புக்கும் நடக்கும் வாழ்வியல் அவனின் மூளையின் செயல்பாட்டை பொறுத்து அமையுமாறு மனிதன் உருவாக்கப்பட்டான்.. ஒவ்வொரு மனித மூளைகளின் கட்டுப்பாடு அவரவரிடமும், எங்களது கட்டுப்பாட்டிலும் ஒரு நகல் இருக்கும்..
உன் (அகிலன்) நகல்களை கொண்டு, நாங்கள் அனுப்பும் செய்தியை படிக்கும் திறமை உள்ளவன் என்பதை அறிந்து கொண்டு உனக்கு அனுப்பப்பட்டது அந்த செய்தியும், விண்கல் மாதிரியான செயற்கைகோள் பாகமும்.. இந்த செய்தியை உன்னை போல இன்னும் பல மனிதர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. மற்றவர்களின் நிராகரிப்பால் இந்த செய்தி ஒரு குப்பையாகவும் வெறும் விண்கல்களாகவும் ஒதுக்கப்பட்டது பல ஆண்டுகளாக... எல்லாம் அவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது..
நீ அதை ஆராய்ந்து உனக்கு எங்கள் குறியீடுகளை படித்து உணரும் திறமையை வெளிக்கொண்டு வர முடியும் என்பதை நிருபித்து விட்டாய்... அதன் அடிப்படையில் உனக்கு இந்த பதில் செய்தி அனுப்பப்பட்டுள்ளது..
உன்னுடைய கால தாமதத்தால் நீ செழியனை இழந்தாய்.. கால தாமதமும் உன் எண்ணங்களின் வெளிப்பாடே.. இழப்பும் வாழ்வின் ஒரு சாயல் என்பதை காலம் உனக்கும் உணர்த்தியிருக்கும்.. அது கொலை இல்லை.. இது கிரக வாசிகள் அறியா வகைப்பாடுகள்... செழியன் இறப்பு நிர்பந்திக்கப்பட்டது என்றோ.. உனக்கும் அந்த நிகழ்விற்கு எவ்வித தொடர்பும் இல்லை..
மேலும்,
ஆதிக்க உயிரிகளான மனித உயிர்களின் செயல்பாடுகள் பூமிக்கு மிக பெரிய விளைவை உண்டாக்கும் வகையில் இருப்பதினாலும், மற்ற உயிரினங்களின் இன அழிவு விகிதங்கள் அதிகமாகி உள்ளதாலும், இயற்கை சுற்றுசூழலுக்கு எதிராக இருப்பதாலும் இந்த மின்னஞ்சல் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அனுப்பப்படுகிறது...
பூமியின் பேரழிவும் மற்ற கிரக வாசிகளின் பேரழிவும் மனித உயிரிகளின் செயல்பாடுகளின் விளைவுகளால் இருப்பதால், இனி வரும் காலங்களில் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு நற்செயல்முறைகளும் மனித இன அழிவிற்கு சாத்திய கூறாக அமைய நேரிடும் என்பதை கண்டிப்போடு வற்புறுத்துகிறோம் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்ததை மகிழொளி படித்து வாயடைத்து செய்வதறியாமல் வியந்து இருந்தாள்..!
மாசி மாதம் 12ஆம் தேதி, ஸ்ரீ துர்முகி ஆண்டு, கலியுகம் 5117. (February 24, 2017)
"அப்பா, இந்த கதையோட முடிவு என்ன.. அப்படி என்ன தான் இந்த மனிதர்கள் பண்ணிட்டு இருக்காங்க.. என்ன என்ன பிரச்சனைகள் இருக்கு இந்த பூமியில.. எப்படி தான் சரி பண்றது அதுலாம் சொல்லுங்க பா.. எப்படி..? நான் என்ன பண்ணனும் சொல்லுங்க " என்று குட்டி மேகவதி தன் அப்பா துருவிடம் துருவி துருவி கேட்க...
அதற்கு துருவ், ஹாஹாஹாஹா என முதலில் சிரித்து வைத்தான்.. உனக்கு கதை புரிஞ்சதா முதல்ல ...? எனக்கே அங்க அங்க தூக்கம் வந்துடுச்சு... நீ கேள்வி வேற கேக்கற..
நம்ம சிந்தனைகள் நல்ல நோக்கத்திற்காக பொது நலத்தோட இருந்தாலே போதும் குட்டி.. எல்லாம் சரி ஆகிடும்.. இந்த உலகத்துல இருக்கிற எல்லா மனிதர்களும் இந்த மாதிரி சிந்திக்க மாட்டாங்க.. ஆனா அப்படி எண்ணங்களை கட்டுப்படுத்தி சிந்திக்க வைக்க தெரிஞ்சக்கிட்டு மத்தவங்களுக்கு கத்துகுடுக்கணும்.. அப்பவே சரியாக ஆரம்பிச்சிடும்.. என துருவ் சொல்லும்போதே...
ஹம்ம்கும் இதுக்கு கதையே கொஞ்சம் நல்லா புரியுது என மேகா குழம்பி செல்லமாக திட்ட...
பள்ளிக்கூடத்துல நீ கதை போட்டியில் சேரனும்னு சொன்ன.. அதான் இத கிறுக்கி வச்சிருக்கேன்.. கொண்டு போய் சப்மிட் பண்ணு.. டீச்சர் ஏதும் கேள்வி கேட்டா எங்க அப்பா தூக்கத்துல எழுதினாங்கனு சொல்லி தப்பிச்சிடு.. ஹாஹாஹாஹா என வாய்விட்டு சிரித்தான் தன் மகளோடு.. !
சரி என்ன தலைப்புனு சொல்லுங்க பா.. !
"நலம், நலம் அறிய ஆவல்" னு வச்சிக்கலாம்.. !
பூமியோட நலம் தெரிய நாமளும் நம்ம நல்ல சிந்தனை மற்றும் செயலோடு காத்திருப்போம் குட்டி..!
பின் குறிப்பு :
தனக்குள் மறைந்து கிடந்த தமிழ் ஆர்வத்தை தன் நட்பின் மூலம் தூண்டி, எண்ணற்ற படைப்புகளை உலகிற்கு தந்த அகிலனும், இந்த கதை எழுதிய நானும் முன்னாள் கிரகவாசியான அகிலனின் தோழர் செழியனுக்கு சமர்ப்பிக்கிறோம்...!
நலம்..! நலம் அறிய ஆவல்..!
Disclaimer:
இது ஒரு புனைகதைப் படைப்பு. இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள அனைத்து கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், இடங்கள் மற்றும் அமைப்புகள் ஆசிரியரின் கற்பனையின் விளைபொருளாகவோ அல்லது கற்பனையாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். வாழும் அல்லது இறந்த உண்மையான நபர்களுடன் அல்லது உண்மையான நிகழ்வுகளுடன் எந்த ஒற்றுமையும் இருந்தால் அது முற்றிலும் தற்செயலானது. இந்தக் கதை பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கற்பனைக் கூறுகளைக் கொண்டுள்ளது மற்றும் நிஜ உலக நம்பிக்கைகள், நடைமுறைகள் அல்லது சித்தாந்தங்களை பிரதிபலிக்கவில்லை.