சுதா திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
சுதா திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
விவேக் மிகவும் தவிப்புடன் இருந்தான். இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன. அதற்குள் அவளிடம் அந்த மூன்று வார்த்தைகளை கூறி விட வேண்டும். "நான் உன்னை காதலிக்கிறேன் " என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் போதே அவன் வாய் தித்தித்தது. தன் காதல் தேவதையிடம் சொல்லி அவளும் திருப்பி சொன்னால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான். பாதாம் முந்திரி கலந்த ஐஸ்கிரீம் அவன் வாயில் கரைவது போல் இருந்தது. எதிர்வீட்டில் தான் இருக்கிறாள் ரம்யா. ஆனால் கண்ணிலேயே தென்பட மாட்டேன் என்கிறாளே. உறவினர் கூட்டம் அவளை மொய்த்துக் கொண்டிருந்தது.
விவேக்கின் மனமும் உடலும் தவித்தது. காதல் தீ அவனை சுட்டெரித்தது. அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்த மூன்றெழுத்து பெயர் ரம்யா. யதேச்சையாக ஜன்னல் வழியாக ரம்யா அவனை கடைக்கண் பார்வை பார்த்தாள். விவேக்கின் பாதாதி கேசம் சிலிர்த்தது. இதுதான் சமயம் என்று கட்டியணைத்து முத்தமிட்டு "நான் உன்னை தீவிரமாக விரும்புகிறேன்" என்று கூறினால் கூட ஏற்பாள் என்று தான் தோன்றியது. மாடிக்கும் கீழேக்கும் அலைந்து எல்லா ஜன்னல்களிலும் மாறி மாறி தவம் கிடக்க ஆரம்பித்தான் விவேக். ரம்யாவை எப்படியாவது தனிமையில் சந்தித்து விட வேண்டும் என்று தாபத்துடன் தவித்தான்.
"விவேக் சீக்கிரம் சாப்பிட வா அத்தை மாமா எல்லோரும் வந்து விடுவாங்க கடைக்கு போகணும்" என்று அம்மா அழைத்தாள். அரை மனதுடன் படி இறங்கிப் போனான் விவேக். கை சோற்றை அளைந்தது.
"பொரியல் இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமா? அம்மா கேட்டது காதிலேயே விழவில்லை. சாம்பாரை சோற்றில் சரியாக கலக்காமல் அப்படியே விழுங்கினான். "தட்டைப் பார்த்து சாப்பிடுடா" என்று அம்மா அதட்டினாள். சாப்பாடு பிடிக்கவில்லை மனதில் காதல் கவிதைகள் ஊர்வலம் வந்தன.
ரம்யாவின் கடைக்கண் பார்வை நினைவிற்கு வந்து அவனை கிடுக்கிப்பிடியாக ஆக்கிரமித்தது. அவன் மனம் அவளோடு மௌன மொழி பேசியது. நீண்ட உஷ்ண பெருமூச்சை வெளியிட்டான். விவேக்கின் அலைபேசி அடித்தது. கோபால்தான் பேசினான். என்னடா நினைத்ததை சாதித்து விட்டாயா? குறுமபும் ஆர்வமும் கொப்பளிக்க கேட்டான் கோபால்.
"போடா நீ ஒருத்தன் அவளை தனியாவே பார்க்க முடியல வீட்ல ஜே ஜே னு திருவிழா மாதிரி கூட்டமா சொந்தக்காரங்க வந்து என் உயிரை வாங்குறாங்க. கோபால் சிரித்தான். "காதல்னா என்ன சும்மாவா? ட்ரை ட்ரை ட்ரை.
கடந்த சில நாட்களாக விவேக் சரியாக தூங்காமல் சரியாக சாப்பிடாமல் கனவுகளின் ஆட்சியில் இருந்ததனால் உன்மத்தம் பிடித்தவன் போல் இருந்தான். ரம்யாவின் விழிகளின் கிறக்கம் அவனை போதை கொண்டவனாக மாற்றி விட்டிருந்தது.
வாசலில் சென்று எட்டிப் பார்த்தான் போன் செய்யலாம் என்றால் அவள் போன் அவளிடம் இல்லை போலிருக்கிறது. போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு வாண்டு ஒன்று போனை எடுத்து அக்கா உனக்கு போன் என்று அலறியது இவன் காதில் விழுந்தது. எதுவும் பேச பிடிக்காமல் லைனை துண்டித்தான்.
அவள் முகத்தை பார்க்காமல் இருந்தாலும் அவள் குரலை கேட்காமல் இருந்தாலும் தன் அன்பிற்கும் காதலுக்கும் ரம்யா மட்டுமே உரித்தானவள் என்பதை அவளிடம் எப்படி சொல்லுவது என்று படபடத்தது விவேக்கின் மனம்.
"இப்படிச் செய்தால் என்ன என்று யோசித்தான் விவேக் ஏதாவது ஒரு வாண்டு ஒன்றை பிடித்து அதன் மூலம் செய்து ஏதாவது அனுப்பலாமா அவளுக்கு.?
ஐந்து நிமிடம் அவளுடன் பேச தனிமையில் சாவகாசம் கிடைத்தால் போதும் என் மனதில் உள்ளவற்றை கொட்டி விடுவேனே என்று நினைத்தான் விவேக்.
எந்நேரமும் யாராவது அவள் வீட்டில் இருந்து கொண்டே இருந்தார்கள்.
ஒரு ஜாக்பாட் அடித்தது விவேக்கிற்கு. ரம்யா வீட்டில் வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரும் எங்கோ புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள். தன் வீட்டு வாசலில் மறைந்திருந்து அம்மா பார்க்காத வண்ணம் சட்டென்று ரம்யா வீட்டு கேட்டை திறந்து கொண்டு நுழைந்தான் விவேக். தாளிடாத வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். ரம்யா கூடத்தில் துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். அவள் கைகளில் மருதாணியும் கண்களில் மையும் மின்னியது.
சட்டென்று அவளை வாரி அணைக்க நினைத்தவன், மருதாணி இட்ட அவள் கரங்களை பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு "எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும் உன்னைத்தான் பிடிக்கும்" என்று அவள் காதில் கிசுகிசுத்தான். பட்டென்று அவனை உதறித் தள்ளினாள் ரம்யா.
"என்ன பிஹேவியர் இது? இதுக்கு முன்னால பீச்லயும் ஹோட்டலிலும் சினிமாவிலயும் சொல்லாததையா இப்ப புதுசா சொல்லுற நீ? அதுவுமில்லாம எவ்வளவு கஷ்டப்பட்டு, தவமாய் தவம் கிடந்து நம்ம கல்யாணத்துக்கு பெரியவங்க கிட்ட சம்மதம் வாங்கி இருக்கோம். பெத்தவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தானே இதனை நாள் பொறுமையா காத்திருந்தோம். நம்ம காதல என்ன அவ்வளவு குறைச்சலா மதிப்பு போட்டுட்டியா ? அத்தை மாமா யாராச்சும் வந்து இப்ப பார்த்தாங்கன்னா உன்னையும் என்னையும் பத்தி என்ன நினைப்பாங்க?" என்றாள் கோபத்துடன் ரம்யா.
"அதுவும் இல்லாமல் திடீர்னு என்ன ஐ லவ் யூ இப்போ. கல்யாணமோ நிச்சயம் ஆயிடுச்சு நமக்கு. " கோபமும் நாணமும் அவள் முகத்தில் ஒருங்கே கோலமிட்டது.
ரம்யா ரொம்ப சாரி ரம்யா. இன்னும் நாலு நாள்ல உனக்கு நான் ஹஸ்பண்ட் ஆயிடுவேன். ஒரு லவ்வரா உனக்கு ஒரு தடவை ஐ லவ் யூ சொல்லணும்னு ரொம்ப ஆசையா இருந்தது. அதனாலதான் இப்படி பண்ணினேன். கல்யாணத்துக்கு அப்புறம் நமக்குள்ள இருக்கிற காதலில ஒரு பக்குவம் பொறுப்பு வந்துடும் இப்போ ஒரு தடவை கொஞ்சம் ஃப்ரீயா சொல்லணும்னு ஒரு ஆசை." என்றான் விவேக் தாபத்துடனும் ஆசையுடனும். உண்மையான காதல் ஓர் அன்பு தவமாய் காட்சியளித்தது அங்கே.