எனக்குப் பூர்வீகம் கரூர் நகருக்கு அருகில் உள்ள தும்பிவாடி என்ற சற்றே பெரிய கிராமம். ஆனால் நான் வளர்ந்தது ஐந்து வெவ்வேறு ஊர்களில்; படித்தது ஒன்பது கல்வி நிறுவனங்களில்; பணி புரிந்தது ஆறு நிறுவனங்களில்; கல்விக்காகவும், பணி நிமித்தமும் கடந்த நாற்பத்தேழாண்டு கால வாழ்வில் பத்து ஊர்களில் வாழும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அவற்றில் மிக அதிக காலமாகத் தொடர்ந்து பத்தாண்டுகளாக நான் வாழும் நகரம் நிஸ்வா. ஓமானின் தலைநகரான மஸ்கட்டிற்கு அடுத்த படியாக இரண்டாவது முக்கியத்துவம் பெற்ற இந்நகரின் பெருமைகளை எடுத்தியம்பி கேலக்ஸியின் வாசகர்களை ஒரு முறையேனும் இந்நகருக்கு அழைத்து வரத் தூண்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
மஸ்கட்டில் இருந்து அமீரகத்தின் “அல் எய்ன்” என்ற புகழ்பெற்ற எல்லைப் புற நகருக்குச் செல்லும் சாலையில் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒன்றரை மணி நேரப் பயணத்திலும் அமைந்துள்ள ‘நிஸ்வா’, ‘அல் தஹ்லியா’ மாகாணத்தின் தலை நகராகும்.
ஒமான் வரைபடம்
இன்றைய சுல்தானேட் ஆஃப் ஓமான் என்ற ஒருங்கிணைந்த தேசம் 1950 களுக்கு முன்னர் “சுல்தானேட் ஆஃப் மஸ்கட்” மற்றும் “இமாமேட் ஆஃப் ஓமான்” என்னும் இரு தனித்தனி நாடுகளாக இருந்தன. மஸ்கட்டின் ஆட்சி வழிவழியாக சுல்தான்களின் வாரிசுகளுக்குக் கைமாற்றிவிடப் படும் பாரம்பரிய மன்னராட்சி முறை.
“ஓமான்” என்ற உள்நாட்டின் ஆட்சித் தலைமை ‘இமாம்’ என்றழைக்கப்பட்ட மத குரு. தலைமை இமாமைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கற்றறிந்த, செல்வாக்கு மிக்க ஷேக்குகள் வசம் இருந்திருக்கிறது. இமாம் எந்த ஊரைச் சேர்ந்தவரோ அந்த ஊரே இமாமேட் ஆஃப் ஓமானின் தலை நகரமாக இருக்கும். அவரது காலத்திற்குப் பிறகு தேர்தல் நடத்தப் பட்டுப் புது இமாம் வேறு நகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்நகரம் தலைநகரமாகச் செயல்படும். இவ்வாறு இன்டீரியர் ஒமான் என்றழைக்கப்பட்ட மேற்கு ஹஜர் மலைத் தொடருக்கும், சவுதி அரேபியாவை ஒட்டி எம்ப்ட்டி குவார்ட்டர் ( Empty Quarter) என்றழைக்கப்படும் ரப் அல் ஃகலி (Rab Al Khali) என்ற பாலை வனப்பகுதிக்கும் இடைப்பட்ட இமாமேட்டின் தலை நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையைப் பொறுத்து நிஸ்வாவும், ருஷ்டாக்கும் மாறி மாறி இருந்திருக்கின்றன. நாட்டின் தலைவராக இமாம் இருந்தாலும் ஒட்டுமொத்த அதிகாரமும் அவரிடம் குவிக்கப் படவில்லை. நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் நிர்வகிக்க தனித் தனி கவர்னர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அக் கவர்னர்கள் தங்கள் இனக்குழுக்களைத் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தனர்.
நிஸ்வா, ஒமான்
1950 களின் முற்பகுதியில் ஓமானில் எண்ணை வளம் இருப்பது கண்டறியப் பட்டது. புதிதாகப் பதவிக்கு வந்து நிஸ்வாவில் இருந்து ஆட்சி புரிந்து வந்த காலிப் அல் ஹினாய் என்ற இமாமை எதிர்த்து இங்கிலாந்து ராணுவத்தின் துணையோடு மஸ்கட்டின் சுல்தான் சையது பின் தைமூர் போரில் இறங்கினார்.
இமாம் காலிப் அல் ஹினாய்
சுல்தான் சையது பின் தைமூர்
1954 முதல் 1959 வரை நடந்த ஜபல் அக்தர் போரில் சுல்தான் சையது பின் தைமூர் வெற்றி பெற்று சுல்தானேட்டையும், இமா மேட்டையும் ஒன்றினைத்தார். இமாம் காலிப் அல் ஹினாய் சவுதி அரேபியாவிற்குப் புலம் பெயர்ந்தார். இந்தப் போரில் பிரிட்டிஷ் போர்விமானங்களின் குண்டு வீச்சில் சிதைவுற்ற நிஸ்வாவில் புகழ்பெற்ற வட்ட வடிவக் கோட்டை புதுப்பிக்கப்பட்டு இன்று ஓமானின் அடையாளங்களுல் ஒன்றாகத் திகழ்கிறது. சுல்தான் சையது பின் தைமூர் தொடுத்த போரால் ஏற்பட்ட காயங்களுக்கு அவரது மகன் சுல்தான் காபூஸ் பின் சையது அல் சையது மருந்திட்டு ஆற்றி மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு தாய் மக்களாக அமைதியுடன் வாழ வழிவகை செய்தார்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த நிஸ்வா என்ற நகரிலும், அல் தஹ்லியா மாகாணத்தின் மற்ற புகழ் பெற்ற ஊர்களான பஹலா, ஜிப்ரீன், இஸ்கி, இம்தி, பிர்கித் அல் மௌஸ், ஹம்ரா, மிஸ் ஃபாத் அல் அப்ரீன், வாதி நக்கர், வாதி தம், வாதி முஹைதீன், வாதி தனுஃப், ஜபல் அக்தர், ஜபல் ஷாம்ஸ் என ஒரு டஜனுக்கும் அதிகமான புராதனத்தையும், கலாச்சாரத்தையும் புதைத்து வைத்திருக்கும் தனித்துவமான இயற்கை எழில் கொஞ்சும் சிற்றூர்கள் உள்ளன.
நிஸ்வாவை ஒரு முழு உடலாகக் கற்பனை செய்தால் நிஸ்வாவின் புகழ்பெற்ற கோட்டை இருக்கும் பகுதியைத் தலையாகவும் நான் மேலே மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை அவ்வுடலின் இன்ன பிற அங்கங்களாகவுமே கருத வேண்டும்.
‘“விண்மீன்” இதழுக்காக நிஸ்வாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள் எனச் சகோதரர் பாலாஜி பாஸ்கரன் கேட்ட போது அதனை எப்படி ஒரு கட்டுரையில் எழுத முடியும் என்ற கேள்வி என்னைத் துளைத்தது.
சரி வழக்கம் போல ஒரு தலைப்பை வைத்து எழுத ஆரம்பிப்போம் மற்றதை கருப் பொருள் பார்த்துக் கொள்ளும் என எழுதத் துவங்கினேன். வரலாற்றில் என்னைப் பின்னோக்கி இழுத்துச் சென்ற “நிஸ்வா” இப்போது தன்னை எப்படி அறிந்துணர வேண்டும் என விண்மீன் வாசகர்களுக்கு வழிகாட்டப் பணித்திருக்கிறது.
அதன் முதற்கட்டமாக ஒரு வாரம் பத்து நாள் தங்கிச் சுற்றிப் பார்த்துக், கதைகள் பேசி, இளைப்பாறிச் செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இங்கு வந்து சேர வேண்டியது ஒரு வியாழக் கிழமையன்று. பிற்பகல் இரண்டு மணிக்கு பழைய நிஸ்வாவின் குறுகிய சந்துகளுக்குள் இருக்கும் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட ஆனால் பழைமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ள ஏதாவது ஒரு மண் வீட்டில் அறையெடுத்து பெட்டிகளை வைத்து விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு இளைபாறிக் கொண்டிருங்கள்.
நீங்கள் கண்விழிக்கும் போது அடுத்த மாத விண்மீன் இதழ் உங்களை வந்தடைந்திருக்கும். அப்போது உங்களை நிஸ்வாவின் புகழ் பெற்ற வெள்ளிக் கிழமைச் சந்தைக்கு முதல் நாள் மாலையில் இருந்தே முழு முனைப்புடன் தயாராகிக் கொண்டிருக்கும் ஓமானிகளைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன்.
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது…
இளங்கோ ராமசாமி.