சார்ஜா
எழுத்தாளர் தெரிசை சிவா, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் இருக்கும் தெரிசனங்கோப்பு என்னும் அழகிய கிராமத்தில் பிறந்தவர்.
தற்போது பாலைவனப் பூமியில் – அமீரகத்தில் – வேதியியல் துறையில் பணி புரிகிறார். வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் எழுத்தின் மீதான காதலால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். இவரின் கதைகள் வட்டார வழக்கில் எழுதப்படுவதால் மண்ணின் மணத்தோடும், கிராமத்திற்கே உரிய நக்கல், நையாண்டி நகைச்சுவையுடனும் இருக்கும்.
இவரின் பல கதைகள் பேசப்பட்டாலும் குறிப்பாக ‘சடலச்சாந்தி’ என்னும் சிறுகதை பலரால் பாராட்டிப் பேசப்பட்டது. அதேபோல் ‘முடியன்’ மற்றும் ‘அண்டி’ சிறுகதைகள் வாசித்தவர்கள் அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசாமல் இருப்பதில்லை, அந்தளவுக்கு அக்கதைகள் வாசிப்பவரை வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை.
இதுவரை 'குட்டிக்கோரா', 'திமில்', 'தாச்சி' என்னும் சிறுகதை தொகுப்புக்களும், 'ரூபிணி', 'தகர்' என்னும் நாவல்களும் எழுதியிருக்கிறார். விரைவில் கேலக்ஸி வெளியீடாக, வித்தியாசமான கதைக்களத்தில் ‘அயலோன்’ நாவல் வர இருக்கிறது.
நமது கேலக்ஸியின் மண்ணின் மணத்தோடு எழுதும் எழுத்தாளருக்கான 'பாண்டியன் பொற்கிழி' விருதை இந்த ஆண்டு பெற்றிருக்கும் தெரிசை சிவா, நமது விண்மீன் இதழுக்காக கொடுத்த சிறப்புப் பேட்டி…
தங்களுக்கு எழுத்தார்வம் எப்போது ஏற்பட்டது?
“நான் ஊர்புறத்துல கிராமத்துல இருந்து வந்தவன். அந்த காலத்துல சாயங்காலம் நேரத்துல அரசமூட்டுல, குளத்தான் கரையில, வீட்டு படிப்புரையில கதை கேக்குறதுதான் பொழுதுபோக்கு. அப்பவே நான் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதேதோ கதை சொல்லி தூங்க வைப்பேன். அதே மாதிரி நான் தூங்குறதுக்கும் பத்து கதை தேவைப்படும். இப்ப நினைச்சு பார்த்தா... அது தான் நான் எழுதுறத்துக்கான விதைன்னு தோணுது.
சிவா - தெரிசை சிவா ஆனது பற்றி..?
“ஊர் திருவிழா நேரத்துல "தெரிசை இளைஞர்கள்னு" பேரு போட்டு பேனர் வைக்கிறது பெரிய கௌரவமா தோணும். என் ஊர் பேரை எப்போதும் நினைவில் வைக்கனும் நெனச்சேன். அதுக்காக என் பேரோட சேர்த்து ‘தெரிசை’ன்னு சேர்த்தேன். ஆனா இப்ப அதுவே என்னோட பிராண்டாக ஆகிடுச்சு!”
உங்கள் கதைகளில் நகைச்சுவை இழையோடுவது - உங்கள் பேச்சும் அப்படித்தான் - எதார்த்தமானதா அல்லது அப்படியான கதைகளை அதிகம் விரும்பி எழுதுவீர்களா..?
நான் வளர்ந்த சூழ்நிலை, சுற்றியிருந்த நண்பர்கள் அதுக்கு காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன். ரெம்ப இறுக்கமான சூழ்நிலைகளிலும் எங்கூருல சிரிக்க ஆளுங்க உண்டு. செத்த வீட்டுல கூட, பொட்டி சிரிக்க வைக்கும் கிருத்தரக்காரர்கள் நிறைஞ்ச ஊராக்கும். அதுதான் என் எழுத்துல அங்கங்க என்னையும் அறியாம வெளிப்படுதுன்னு நினைக்கிறேன்.
தங்கள் நாவல்களின் களங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே, அவற்றை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்..?
என் கதைகளை இவரோட கதைமாதிரி இருக்குன்னு சொல்லக்கூடாதுன்னு நினைப்பேன். எந்த சாயலும் இல்லாம எழுதணும் நினைப்பேன். நான் விரும்புற உலகம், கடந்து போக நினைக்கும் காலம், கட்டுடைத்து கரையேறும் கதைமாந்தர்கள்... இவைகள்தான் என் கதைக்கான அடித்தளம்.
நாவல் - சிறுகதை இதில் எது எழுதுவது தங்களுக்குப் பிடித்தமானது..?
இரண்டுமேதான். வெயில்ல அலைஞ்சிட்டு மோர் குடிக்குற மாதிரியும், ஆற அமர உக்காந்து பிரியாணி சாப்பிடுற மாதிரியும்தான் சிறுகதையும் நாவலும். எழுத நினைச்சதை சுவையோட எழுதி முடிக்க வைக்குற ‘ருசி‘ மட்டும் குறையாம பார்த்துக்கிடணும். அவ்வளவுதான்.
கதை எழுதும் முன்னர் யோசித்து வைத்து எழுதுவீர்களா அல்லது எழுத ஆரம்பித்து கதையின் போக்கில் பயணிப்பீர்களா..?
கதைக்கான முக்கியமான திருப்பங்கள் மட்டும் மனசுல வைத்திருப்பேன். ஆனா எழுத ஆரம்பிச்சவுடன் கதாபாத்திரங்கள் எனக்கு கட்டளையிடுவாங்க. நான் கதை போகுற போக்கில் பயணிக்கும் பயணி மாதிரி!
சினிமா பக்கம் நகர இருப்பதாக கேள்விப்பட்டோம், அதற்கான முயற்சிகளில் இருக்கிறீர்களா..?
சில முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு. முழுநேர எழுத்தாளர்களே முட்டி மோதிட்டு இருக்குற சினிமாக்குள்ள, சும்மா பொழுபோக்குக்காக எழுதுற நம்ம கதைகளைப் பத்தி கேக்குறப்போ சந்தோசம் தொத்திக்கும். எல்லா எழுத்தாளர்களுக்கும் உள்ளது மாதிரி, என்னோட கதைமாந்தர்களை பெரிய திரையில் பாக்குற ஆர்வம் எனக்கும் உண்டு. பார்க்கலாம். காலம் என்ன முடிவு பண்ணுதுன்னு”
உங்களது பிள்ளையில் எது சிறந்த பிள்ளை எனக் கேட்பது அபத்தம் என்றாலும் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை மற்றும் நாவலைச் சொல்ல முடியுமா?
ஒரு பிள்ளையை சொன்னா பிற பிள்ளைகள் வருத்தப்படும்லா. ஆனா நிறைய வாசகர்கள் எடுத்து கொஞ்சுனதுன்னு சில பிள்ளைகளை அதாவது சில கதைகளைச் சொல்லலாம். சடலசாந்தி, அண்டி , முடியன்னு சில கதைகள்
வாசிப்புத்தான் எழுத்தை மேம்படுத்தும் என்று சொல்கிறார்களே… அது குறித்து தங்கள் கருத்து..?
"கண்டிப்பா உண்மை. வாசிப்பே உளறி ஓடும் மனசுக்கு ஓரு ஒழுங்க காட்டும் ஆசானாக்கும். என்னோட அயற்சியான நேரங்களிலெல்லாம் புத்தகங்கள் மட்டுமே பெரும் துணையாகும்.
இந்த ஆண்டு பாண்டியன் பொற்கிழி விருது வாங்கியது பற்றி..?
“பாண்டியன் பொற்கிழி விருது எனக்கு பெரிய மரியாதை. என்னை சார்ந்தவர்களுக்கும், என் ஊர்காரர்களும் கூட ஒரே சந்தோஷம். நாஞ்சில் நாடன் சொன்னது போல , அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. இதை சாத்தியப்படுத்திய கேலக்சி பதிப்பக நண்பர்களுக்கு இறைவன் எல்லா நன்மைகளையும் அருளட்டும்.
தங்கள் குடும்பம் பற்றி..?
என்னோட அப்பா சரவணபெருமாள். அம்மா ருக்குமணி. விவசாயக் குடும்பம். ஷீலா, கோகிலான்னு ரெண்டு தங்கைகள். என்னோட எல்லா கதைகளோட முதல் வாசகி என்னோட மனைவி ராதாதான். எல்லா புகழும் இறைவனுக்கும், அடுத்த படியா அவளுக்குத்தான். ரெண்டு குழந்தைகள் மகள் சாய். மகன் அஸ்வந்த்.
புதிதாக எழுத வருபவர்களுக்கு தாங்கள் எதுவும் சொல்ல விரும்பினால்..?
“எழுதுறதுக்கு முன்னாடி யோசிக்காதீங்க, முதல்ல எழுத ஆரம்பிங்க. பின்னாடி பொழுது போன போக்கில திருத்திக்கலாம். கதை எழுதுவது பயம் இல்லாத செயல். வாசிப்பதைத் தொடங்குங்கள், எழுத பழகுங்கள், உங்க எழுத்து அதற்கான வாசகர்களை அதுவாகவே தேடிக் கொள்ளும். அவ்வளவுதான்.
சார்ஜா