பால்கரசு
அபுதாபி
மனித வாழ்க்கைக்கு உரம் சேர்ப்பதே உறவுகள்தான்.
அன்பு, பாசம், பரிவு, புரிதல் போன்ற பல்வேறு உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டு நெருக்கமாக இருக்கவேண்டிய உறவுகள் எல்லாம் பல குடும்பங்களில் கலகலத்துக் காணப்படுகின்றன. இருவழிப் பாதையாக இருக்கவேண்டிய உரையாடல்கள் ஏனோ பல உறவுகளுக்குள் ஒருவழிப் பாதையாக இருக்கின்றன.
உரையாடல்கள் மூலமாகத்தான் இருவரின் மனங்கள் திறந்து உறவை ஆழமாக்கும். பலருக்கு உரையாடல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பல குடும்பங்களில் பெரும்பாலும் உரையாடலாக இருப்பதில்லை அது வெறும் வாக்குவாதங்களாக மட்டுமே இருக்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உரையாட வேண்டிய உரையாடல்கள், இப்போது ஒருவரின் கோபத்தின் இரைச்சலாக மட்டும் மாறிவிடுகிறது. பாசத்தின் பாதை இரு வழியாக இருக்க வேண்டும். அது ஒரு வழிப் பாதையாக இருக்கக் கூடாது.
பலருக்கு உரையாடல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடையாது. அவர்களின் உரையாடல் என்பது, தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் பிறர் மீது திணிக்கின்ற யுத்தகளமாகத்தான் இருக்கிறது.
பலர் உரையாடல் என்கிற பெயரில் வாதாடுகின்றனர். அப்படியே உரையாடினாலும் மற்றவர்களைவிட தாங்கள் பெரியவர்கள், மேலானவர்கள், அதிகம் தெரிந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான தருணமாக உரையாடலைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இருக்கின்ற உறவுகளையும் இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது!
ஒரு சிலர் உரையாடும்போது நாமே ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், உரையாடல்களுக்கு மத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், இதனால் அந்த உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. உறவுகளுக்குள் உரையாடும்போது தன்னுடைய பிரச்சினைகளையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்களின் குறைகளை குத்திக் காட்டி பேசக் கூடாது. எதிரியிடத்திலும் கூட கருணைமிக்க கண்ணியமான வார்த்தை களைப் பயன்படுத்தினால் அவர்களின் கோபமும் எதிர்ப்பும் மறைந்து உறவு மலரும்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உரையாடுவது மட்டுமல்ல. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசுவது, நலம் விசாரிப்பது, கதைபேசி சிரித்து மகிழ்வது இதெல்லாம் குறைந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியில் சென்று உறவினர்களை நேரில் பார்த்துப் பேசும் பழக்கம் குறைந்துவிட்டதால் இளைய தலைமுறைக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.
நாம் பார்க்கும் போது மட்டும் கண்ணாடி நம் முகத்தைக் காட்டும், விலகி விட்டால் கண்ணாடி நம் முகத்தைக் காட்டாது இந்தக் கண்ணாடியின் நியதியே இன்றைய உறவு நிலைகளின் நிலைமை.
நீண்ட காலம் பழகிய நண்பர்களையே தனித்தனியே விசாரித்தால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத போக்கு வெளிப்படும். ஈருடல் ஓருயிர் என்று கருத்தொருமித்து வாழ்ந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் கணவன் – மனைவியைக் கூட தனித்தனியாக விசாரித்தால் ஒருவரைப் பற்றிய ஒருவர் கொட்டித் தீர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது.
மனித உறவுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது ‘தான்’ என்னும் மாயப்பிசாசு. பல ஆண்டுகள் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கூட மாங்கல்ய மஞ்சள் காயும் முன்பே குடும்ப நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டுகின்றனர். சிலர் ஒருவரை ஒருவர் பலி தீர்த்து கொள்கிறார்கள், கூடவே தன் குடும்ப உறுப்பினர்களின் நிம்மதியை சிதைத்து விடுகிறார்கள். பெரியவர்களென்று பிள்ளைகள் விட்டுக் கொடுக்கவோ பிள்ளைகளென்று பெரியவர்கள் சகித்துக் கொள்ளவோ தயாராக இல்லை.
பிடிவாதங்கள் வாழ்க்கை என்னும் வரத்தைச் சாபமாக்கி விடுகின்றன. பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள அகந்தையும், ஆணவமும் அனுமதிப்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் சக மனிதர்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த மனிதச் சமுதாயத்தின் மாபெரும் பிரச்சினைகளில் நமது பிரச்சினை ஒன்றுமே இல்லை என்பதை உணர முடியும்.
நம்மில் பலருக்கு வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொள்வதில் கொள்ளைப் பிரியம். இதன் காரணமாகத்தான், பலருடைய சொல் வேறு, செயல் வேறு என்றாகிவிட்டது. பொய்யான செளகரியங்களுக்காக, உண்மையான சந்தோஷத்தை விற்கத் தயங்காத மனப்பான்மை வளர்ந்துவிட்டது.
மனிதன் பகட்டாக ஆடம்பரமாக வாழ மட்டும் விரும்புவதில்லை. அப்படியான தனது வாழ்வை பிறர் அறிய வேண்டும் என்றும் விரும்புகிறான். வாழ்க்கை என்பது மிகக் குறுகிய காலம் தான். அதில் பணம் சேர்ப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. செளகரியத்திற்காக பணம் தேவை என்றாலும் எதையும் செளகரியமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.
கணவன், மனைவியும் சம்பாதித்தால் பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு நல்லதுதான். ஆனால் ஓடி ஓடி உழைத்து, சம்பாதித்து ஓரிடத்தில் உட்கார்ந்த பிறகுதான் கணவன் மனைவி இருவருக்குமே புரியும். ‘எத்தனை சந்தோஷமான நாட்களை, சம்பாதிக்கும் ஆசையில் இழந்து விட்டோம்’ என்பது.
வசதி இல்லாது இருந்தாலும், பல குடும்பங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அந்நியோன்யமாக ‘வாழ்க்கையை வாழ்க்கையாக’ அனுபவிக்கின்றனர். வாழ்வின் அர்த்தமே இந்த விடுத்துக் கொடுத்தலும் அன்பின் அரவணைப்பும்தான்.
தன் சக்திக்கும் வருவாய்க்கும் உட்பட்டு கிடைக்கும் வசதிகளே போதும். அது வேண்டும்… இது வேண்டும்… என்று ஆசைப்படும் போது, அந்த வசதிகளைத் தகுதிக்கு மீறி அனுபவிக்கும் ஆசைக்கு உட்படும்போது தடுமாறவும் தவறு செய்யவும் நேரிடுகிறது. இருப்பதில் நிறைவு காணும் மனம் படைத்தவர்களால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், அப்படியானவர்கள் வாழ்கிறார்கள்.
மானுட அன்பில் எப்போதும் ஓர் எதிர்ப்பார்ப்புண்டு. தான் கொடுத்த அன்பை அது பிறரிடம் எதிர்பார்க்கும். அது கிடைக்காது போனால் அன்பு நீர்த்துப் போகும். உறவுகளுக்குள் சிறிய கோபதாபங்கள் ஏற்படுவது இயற்கை. அது தவிர்க்க முடியாதது. சொன்ன ஒரு சொல்லை அல்லது சம்பவத்தை ஊதிப்பெரிது படுத்துவதை விட்டுவிட்டு அதை மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உறவுகள் மென்மையானவை. மிக மெல்லிய இழைகளால் பிண்ணப்படவை, கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளும் எச்சரிக்கை உணர்வுடன் உறவைக் கையாண்டால் பிரச்சினை வராது. பெருந்தன்மை உள்ள, பேரம் பேசாத, குறை காணாத அன்பு இருந்தால் மனித உறவுகளுக்குள் உள்ள மனப்பூசல் விலகி உறவுகள் வலுப்பெறும்.
உறவுகளுக்குள் உரையாடல்கள் மூலம் வலு சேர்ப்போம் இந்த வாழ்வை இனிதாக்குவோம்.