சந்தியா ராகம்…
எனக்கு அவ்வப்போது சில படங்களைத் தேடி பார்க்க வேண்டுமெனத் தோன்றும். அப்படித்தான் சில வருடங்களுக்கு முன் சந்தியா ராகத்தை யுடியூப்பில் தேடிப் பார்த்தேன், சின்னப் பையன் குடுகுடுன்னு மலையேறுகிற மாதிரி படம் எந்தத் தடங்களும் இல்லாமல் ஓட ஆரம்பித்தது.
கருப்பு வெள்ளைப் படமான சந்தியா ராகம் தொடங்குவதே கவிதையாய்... ஒரு கிராமத்தில் மாடு கத்தும் பின்னணியில் நாட்டுக்கட்டுச் சேலை கட்டிய பெண்கள் தண்ணீர் தூக்கிக் கொண்டு போவது, நாற்று நடுவது, எருமைகள் தண்ணீரில் நீந்திக் கடப்பது, மாடு ஓட்டிக் கொண்டு போவது, மாட்டு வண்டி போவது, பேன் பார்ப்பது, கோழிக்குஞ்சுகள் என கேமரா வாழ்வியல் கவிதைகளை உள் வாங்கியபடி சொக்கலிங்க பாகவதரின் வீட்டுக்குள் நுழைகிறது. அப்படியே கட்டிலில் இருந்து எழும் சொக்கலிங்கம் தனது காலை மெதுவாக அழுத்தி ஊன்றி எழுந்து முகம் கழுவி மனைவி விசாலாட்சியை அழைப்பதில் தொடர்கிறது.
குளிக்கப் போகும் சொக்கலிங்கப் பாகவதர் சின்னக் குழந்தையாய் மாறித் தண்ணீருக்குள் கல்லை எடுத்து தவளை (தண்ணீரின் மீது கல்லை செரட்டி எறிந்தால் அது தாவித்தாவி போகும், அதனால் அதை நாங்கள் தவளை என்போம்) விடுவதும், பசங்க விளையாண்டு அப்படியே விட்டுச் சென்ற சில்லு நொண்டிக் கட்டத்தில் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நொண்டி அடித்துப் பார்ப்பதும், சிறுவர்களின் பம்பர விளையாட்டை ரசித்து கோசெடுத்து தனது கைகளில் விடச் செய்வது என கிராமத்து துள்ளல் பெருசாக வலம் வருகிறார். இவரைப் போன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடுக்கான பெரிசு இருப்பார். எங்க ஊரிலும் எங்கய்யா ஒருத்தர் இருந்தார். எல்லாவற்றிலும் கலந்து கொள்வார். நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து சமீபத்தில்தான் இயற்கை எய்தினார். அவர் இறக்கும்வரை நாங்கள் அவரை இளைஞர் மன்றத் தலைவர் என்று சொல்வதை ரசிப்பார்.
குளித்து, சிறுவனாய் விளையாடி மகிழ்ந்து வீட்டுக்கு வந்து தனது மனைவி இறந்திருப்பது கண்டு அழுவதும், காரியங்கள் முடிந்ததும் தனக்கு குழந்தைகள் இல்லாததால் தனிமையில் வாழ விரும்பாமல், சென்னையில் சிறிய வாடகை வீட்டில் மனைவி அர்ச்சனாவுடனும் மகள் வள்ளியுடனும் (பேபி ராஜலட்சுமி) வாங்கும் சம்பளத்தில் இழுத்துக்க பறிச்சுக்க என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் தம்பி மகனான ஓவியர் வீரசந்தானத்தைத் தேடி வருகிறார். கிராமத்தில் ஆர்ப்பரிக்கும் காட்டருவியாக சுற்றியவர் சென்னைக்குள் நுழையும் போதே சிகரெட்டுப் பிடிக்கும் சிறுவர்கள், ஆட்டோக்காரனின் ‘சாவு கிராக்கி’ என்ற வசனம் என எல்லாம் தாங்கி எதோ வாழ்க்கையை ஓட்டணுமே என ஒரு வழியாக வீரசந்தானத்தின் வீட்டு விலாசத்தை விசாரித்து வந்து சேருகிறார்.
தனது வாரிசு வீட்டிற்கு வாழ்வின் இறுதியில் போகிறவர்களில் பெரும்பாலானோர் நிம்மதியான வாழ்வை வாழ்வதில்லை என்பதே நிதர்சனம். எவ்வளவுதான் பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து வளர்த்துப் படிக்க வைத்தாலும் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரைப் பார்ப்பதை ஒரு கடமையாக, இல்லை கடனாகக் கூடப் பார்ப்பதில்லை. இன்றைய சமூக வலைத்தளங்களில் வயதானோரை அடிப்பதையும், மிதிப்பதையும், தெருவில் கொண்டு வந்து போட்டுச் செல்வதையும் பார்க்க நேர்வதைத் தவிர்க்க முடியவில்லை, அப்போதெல்லாம் மனசுக்குள் எழும் பெரும் வலியும் வேதனையும் என்ன மனிதர்கள் இவர்கள் என்ற நினைவின் பெருமூச்சொலியாய் கரைந்து செல்கிறது. தன் பிள்ளைகளே பார்க்காத இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் ஏதோ நம்பிக்கையில் தனது உறவுகளின் வீட்டைத் தேடிச் செல்வது என்பது மிகப்பெரும் சோகம்.
சென்னை வந்த இரவில் அறைக்குள் கணவன் வீரசந்தானத்திடம் தங்களது குடும்பச் சூழலில் மாமா இங்கே தங்கி விடுவாரோ என அர்ச்சனா கவலையுடன் கேட்பதும், தொடரும் உரையாடலில் அர்ச்சனாவிடம் கோபமாக பேசுவதைக் கேட்க நேரும் போது உடைந்து போகிறார். அர்ச்சனா அப்படிக் கேட்கும் போது இவரும் சராசரி மருமகள்தான் என்று நினைக்கும் போது அடுத்த நாள் கணவனின் பையில் இருந்து காசை எடுத்து விட, அதை அறிந்து அவன் வினவ, 'பாவம் அவர் வந்திருக்காருல்ல... வாய்க்கு ருசியா எதாவது சமைக்க வேண்டாமா' என்று கேட்கும் போது அவரின் நல்ல குணம் பதியப்படுகிறது.
தங்களின் தேவைக்காக ஒரு இடத்தில் போய் ஒதுங்கும் போது தனக்கு அவர்கள் செய்வதற்கு பிரதி உபகாரமாக எதுவும் செய்யாமல் சும்மா இருக்க, அதுவரை உழைத்த உடம்பும் மனசும் இடம் கொடுப்பதில்லை. அப்படித்தான் சொக்கலிங்கமும் பேத்திக்கும் மருமகளுக்கும் சின்னச் சின்ன வேலைக செய்து அவர்களுடன் நெருக்கமாகிப் போகிறார். குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த வடையில் ஏற்படும் பிரச்சினையால் அன்றிரவே யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அவரைத் தேடும் படலத்துடன் அவர் காணாமல் போனதற்கு மனைவிதான் காரணம் என வீர சந்தானம் எரிந்து விழுவதுமாக கதை நகர்கிறது.
அவரைத் தேடி அலைகிறார்கள்... கண்டு பிடித்தார்களா..? அல்லது அவர் திரும்பி வீட்டுக்கு வந்தாரா..? என்பதுதான் தொடரும் கதைக்களமாய்...
சொக்கலிங்க பாகவதர் கிராமத்து கிழவனாகவே வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வீடு படத்தை தூர்தர்சனில் பார்க்கும் போது ஒரு வீட்டையும் இந்தக் கிழவரையும் காட்டும் போது அந்த வயதில் இந்தாளையும் வீட்டையும் வச்சி படம் ஓட்டுறான் பாரு.... இந்தக் கிழவனை எங்க இருந்துடா புடிச்சானுங்க எனச் சொல்லியிருக்கிறோம். ஆனா இதில் காபி குடிக்கும் போது, மனைவி இறக்கும் போது, மருமகளிடம் மனைவியின் சமையல் பற்றி பேசும் போது, மகனிடம் கக்கூஸ் எங்கப்பா இருக்குன்னு கேக்கும் போது, மருமகளிடம் திட்டு வாங்கும் போது, நாடக நாயகனாக நடித்துக் காட்டும் போது... என இப்படியே நிறுத்தாமல் பல போதுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவரை பாலுமகேந்திரா மட்டும்தான் அழகாக பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும் போது நல்ல கலைஞனை மற்றவர்களும் பயன்படுத்தி இருக்கலாமோ எனத் தோன்றியது.
வீர சந்தானம் சாதாரணக் குடும்பத்து நாயகனாக அருமையாக நடித்திருக்கிறார். சண்டை போட்டுப் படுத்திருக்கும் மனைவியிடம் சமாதானம் ஆக முயற்சித்து மெதுவாகப் பேசுவதும், பின்னர் மனைவிக்கும் குழந்தைக்கும் போர்த்தி விட்டுவிட்டு படுப்பதும், பெரியப்பாவைத் தேடித் திரிவதும், அந்தக் கோவத்தில் மனைவி சாப்பிட்டுச் செல்லச் சொல்லும் போது 'ஆமா அங்க உக்காந்திருக்கவன் உங்கப்பந்தானே' எனக் கத்திவிட்டுச் செல்வது என மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.
அர்ச்சனா... சொல்லவே வேண்டாம்... ஊர்வசி விருது பெற்றவரல்லவா... நடிக்கச் சொல்லியா தரவேண்டும். வரவுக்கும் செலவுக்கும் தட்டுத் தடுமாறி வாழ்க்கை நடத்தும் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். கணவனிடம் எதாவது பழம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லும் போது 'காஷ்மீர் ஆப்பிள் வாங்கிட்டு வரவா... குடுக்கிற மூணு ரூபாயில பேச்சைப் பாரு...' என்று அவன் சொல்லிச் செல்ல அப்படியே முகத்தில் ஒரு சின்ன புன்னகை அரும்ப விடுவார் பாருங்கள்... சான்ஸே இல்லை... இப்படி சீனுக்கு சீன் கலக்கியிருப்பார்.
டீக்கடையில் அமர்ந்து பேசுபவர்கள் பெரியவர்களை கவனிக்காத பிள்ளைகள் பற்றி பேச்சு வரும் போது வாழ்வின் வலியையும் அழகாகப் பதிந்திருக்கிறார் பாலுமகேந்திரா. கலர் படமாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் பார்வையாளனின் பார்வை கதாபாத்திரங்களை விடுத்து பின்னணிக் காட்சியில் போய்விடும் என்பதால் இது போன்ற படங்களை கருப்பு வெள்ளையில் வெளியிடவே பாலுமகேந்திரா விரும்பியதாக மாலியன் என்பவரின் கட்டுரையில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் போல... கருப்பு வெள்ளையில் அந்த மனிதர்களையும் அவர்களின் மனங்களையும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறார்.
படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகே பெயர் போடுகிறார். அப்படிப் போடும் போது 'எம்தோழனும் தந்தையுமாகிய பாலநாதனுக்கு சமர்ப்பணம்' என்று வெள்ளை எழுத்துக்களை கருப்புப் பின்னணியில் காட்டுகிறார்.
பின்னணி இசை எல். வைத்தியநாதன் என்று போடுகிறார்கள். குன்றக்குடி வைத்தியநாதனோ? பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனின் இது போன்ற படங்களை தேடிப் பிடித்து பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது இந்தச் சந்தியா ராகம்.
சந்தியா ராகம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.