சமீபமாய் காவல்துறை என்பது தனி இராஜ்ஜியம், என்ன வேண்டுமானாலும் எங்களால் செய்ய முடியும் என்பதாய் நாம் கண்டு கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை கதைக்களமாய்க் கொண்டு சமீபத்தில் மலையாளத்தில் இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு கதைக்களம். அதில் ஒன்றுதான் 'ரோந்த்'. நாம் இதை அழகிய தமிழில் ‘PATROL’ என்றும் கிராமியத் தமிழில் ‘ரோந்து’ என்றும் சொல்வதுண்டு.
மெய்யழகனில் இரண்டு கதாபாத்திரங்களை ஒரு இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருக்க வைத்து வாழ்வியலை மிக அழகாக நமக்குக் காட்டியது தமிழ்ச் சினிமா. ஆனால் அப்படியான படங்கள் இங்கே அதிகம் வருவதில்லை. இங்கே நாயகப் பிம்பமும் பில்டப்புமே மிக முக்கியமானதாக இருக்கிறது, மலையாளிகளும் இப்போது இப்படியான படங்களை எடுத்தாலும் வித்தியாசமான கதைக்களங்களில் அடிக்கடி பயணித்து அதிலும் வெற்றி காண்கிறார்கள்.
காவல்துறை படங்கள் என்றாலே அதிரடியாய், நாயக பிம்பத்தின் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் காவல்துறையின் மாறுபட்ட பக்கத்தைக் காட்டியிருப்பார்கள். அதன் தொடர்சியாய், அப்படியான கதைகளில் சில படங்கள் வர ஆரம்பித்தன. அதிலொன்றுதான் இந்த 'ரோந்த்'.
நகரில் ஒரு நாள் - பெரும்பாலும் இரவில் - ஜீப்பில் ரோந்து போகும் 25 வருட கால அனுபவம் கொண்ட சப் இன்ஸ்பெக்டரும், புதிதாய் வேலைக்குச் சேர்ந்து ஜீப் டிரைவாக இருக்கும் கான்ஸ்டபிளும் பார்க்கும் நிகழ்வுகள், தீர்த்து வைக்கும் சச்சரவுகள் மட்டும்தான் கதை.
இருவருக்குள் சின்னதாய் ஒரு ஈகோ பிரச்சினை இருப்பதுதான் கதையின் போக்கை இன்னும் சுவராஸ்யமாக்கியிருக்கும். பல இடங்களில் சின்னச் சின்ன மோதல்களும், காரசாரமான விவாதங்களும் இருவருக்குள்ளும் நிகழ்ந்தாலும் கான்ஸ்டபிளின் குழந்தைக்கு உடம்பு முடியலை என்ற செய்தி வந்ததும் தனது முரட்டுக் குணத்தை புறம் தள்ளி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் இடம், அங்கு கிண்டல் பண்ணுபவர்க்கு சிறப்பான பதிலடி கொடுக்கும் இடம் என ஈகோவும் அதை வென்ற இடங்களுமாய் படம் நகரும்.
கான்ஸ்டபிள் அடிக்கப் போகுமிடத்தில் தடுப்பது, கேள்வி கேட்காமல் விட்ட இடத்தில் ஏன் விட்டே எனக் கத்துவது, பட்டுத் தெரிந்து கொள் எனக்கு அனுபவ அறிவு இருக்கு என சில இடங்களில் விட்டுவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது, மனைவியின் சந்தேகத்துக்கு சிரித்தபடி, ஒரு குழந்தைக்குப் பதில் சொல்வது போல் சொல்லிச் செல்வது, அத்தனை அழுத்தமான மனநிலை கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு ஒன்றென்றால் விஸ்வரூபம் எடுப்பது, செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்ததும் காட்டும் அழுத்தம் என இன்ஸ்பெக்டராக திலீஷ் போத்தன் கலக்கியிருக்கிறார்.
அதேபோல் எதற்கும் உண்மையாக இருக்கணும், பணத்துக்காக எதையும் செய்யக்கூடாது என நினைக்கும் கான்ஸ்டபிளாய், ஒவ்வொரு நிகழ்விலும் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஏதோ ஒரு விதத்தில் அடிபட்டு, அதை எப்படியாவது திரும்பிக் கொடுக்கணும் என நினைத்து இரவெல்லாம் பயணிப்பதும், சதி வலைக்குள் விழுந்தது தெரிந்து எடுக்கும் முடிவும் ரோஷன் மாத்யூ தனது கதாபாத்திரத்திற்கு செய்திருக்கும் சிறப்பு.
ரோந்து என்பதால் தொடர்ச்சியான கதைக்களம் எதுவுமில்லாமல், சின்னச் சின்ன நிகழ்வுகள், அவற்றிற்கான தீர்வுகள் என நகரும் கதைக்குள் வீட்டை விட்டு ஓடிப்போன ஒரு பெண் சார்ந்த கதையின் தொடர்ச்சி மட்டும் அந்த இரவில், நகர் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க, அதற்கான தீர்வு என்ன என்பதுதான் படத்தின் முடிவு.
இதில் காவல்துறையில் இருக்கும் நியாயமானவர்களையும் மோசமானவர்களையும் காட்டியிருக்கிறார் இயக்குநர். இப்படியான நிகழ்வுகள், பலி வாங்கல் உள்ளுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்பதைச் சொல்லும் கதைக்களத்தில் இரு பாவப்பட்டவர்களை தங்களது பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டு விட்டார்களே என்ற வருத்தத்தை நமக்குள் அழுத்தமாய் பதிந்ததில் வெற்றி பெற்றிருக்கிறது 'ரோந்த்'.
ரோந்து ஆரம்பிக்கும் போது இருவருக்குள்ளும் இருக்கும் சின்னச் சின்ன உரசல்களை மெல்ல மெல்ல நமக்குள் இறக்கி முடிவில் நம்மை ஜெயித்திருப்பார் இயக்குநர் ஷாஹி கபீர். இவர் இயக்கிய முதல் படம், சிறந்த இயக்குநருக்கான மாநில விருதைப் பெற்றுக் கொடுத்த 'இல வீழா பூஞ்சிறா'. காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால் இவர் காவல்துறையின் மற்றொரு பக்கத்தை, யாரும் சொல்லாத பக்கத்தை, தொடாத பக்கத்தை தனது படத்தில் காட்டுவதை விரும்புவதுடன் அதை அப்படியே, மிக அழகாக காட்டவும் செய்கிறார். இவர் 'ஜோசப்', 'நாயாட்டு', 'ஆபீசர் ஆன் டூட்டி' போன்ற காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியவரும் இவரே.
இதேபோல் திலீஷ் போத்தன் இயக்குநராய் மகேஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் த்ரிசாக்சியும், ஜோஜி போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் ஆவார்.
மனீஷ் மாதவன் தனது சிறந்த ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகளை நாம் நேரில் பார்ப்பது போல் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் அனில் ஜாக்சனின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம். பிரவின் மங்கலத்-தின் படத்தொகுப்பு மெல்ல நகரும் கதையில் அசதி ஏற்படாத வண்ணம் சிறப்பாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு குழந்தைகள் மீதான பற்று எதனால் என்பதை ஆரம்பக் காட்சியிலேயே புரிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு அவரின் அந்தப் பற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் ஒரு பதட்டத்தைக் கொடுக்கத்தான் செய்யும். ரோந்தில் குறைகள் இல்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் நிறைவாய் நிற்கும் காட்சிகளால் குறைகள் நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
ரோந்த் - சின்னச் சின்ன மனதைக் கலங்கடிக்கும் கதைகளுடன் கன்னூர் வட்டம் தர்மசாலாவின் அழகிய இயற்கை காட்சிகளுடன் பயணிக்கும் கதை, காவல்துறையின் மிருக குணமில்லாத மற்றொரு பக்கத்தை, சாகசங்களை விரும்பாமல் நடப்பை, எதார்த்தத்தை, பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்கலாம்.
ரோந்த் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.
இப்படத்தின் விசிட்டிங் கார்டே பெரியவர் இசைஞானி அவர்கள்தான்.
கதைப்படி, திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூத்தில் மத்தளம் வாசிப்பவர் (பூனை) மூலம் தொடங்குகிறது. அவரைக் கொண்டுபோய் இறக்கி விடும் சாக்கில்தான் கூத்தால் ஈர்க்கப்பட்டு பார்வையாளன் இளவரசன், கூத்துக் கட்டுவது முதல், பாடல் நடிப்பு அத்தனையும் கற்றுக் கொள்கிறார். அதை தன்னுடைய ஊருக்கும் எடுத்துச் செல்ல தன் ஊர் நண்பர்கள் மூலமாக அவர்களுக்கும் கற்றுக் கொடுத்து சொந்தமாக தாண்டவனும், இளவரசனும் நண்பர்களும் பணம் முதலீடு செய்து அம்பலவாணன் நாடக சபா தொடங்குகின்றனர். இதில் தாண்டவன் தன் மூத்த மகளை பண்ணை அடிமை வேலைக்கு அனுப்பி அப்பணத்தை தன் பங்காக கொடுக்கிறார். தாண்டவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், இரண்டாவது மகள்தான் ஜெகா எனும் ஜெகதாம்பாள்(அம்மு அபிராமி), தாண்டவன் கதாபாத்திரத்தில் எதார்த்த மனிதனாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் சேத்தன், இவரின் மனைவியாக சத்யா மருதாணி.
இளவரசனுக்கு ஒரே மகன் கல்யாணம்(பாரி இளவழகன்)இளவரசனின் மனைவியாக மணிமேகலை நடித்து தன் பாத்திரத்திற்கான பங்கை சிறப்பாக செய்துள்ளார். நாடகத்தில் எல்லா வேடமும் எல்லோரும் ஏற்று நடிக்கின்றனர், எல்லோரின் வேடமும் அறிந்த இளவரசன் வாத்தியாராக இருந்து, ஜமாவை நடத்துகிறார். கொஞ்சம் கோபமாகவும் நடந்து கொள்கிறார். தாண்டவனின் மூத்த மகள், பெரிய மனுசியானவுடன், பண்ணை வேலைக்கு தன் சிறிய மகளை அனுப்ப திட்டமிடுகிறார். சிறிய மகள் படிப்பில் ஆர்வமுள்ளவளாக இருக்கையில் பண்ணை வேலைக்கு செல்ல மறுக்கிறாள். இதில் இளவரசனின் மகன் கலயாணம் தான் பண்ணை வேலைக்குச் செல்வதாகவும், ஜெகாவை படிக்க அனுப்பச் சொல்கிறான். அந்த அனுதாபத்திற்கு காரணம் ஜெகா மீது கல்யாணத்திற்கு காதல். கல்யாணம் பண்ணை வேலையில் கஷ்டப் படுகிறான். ஒரு கட்டத்தில் ஜெகா நன்றாக படித்து குறிப்பிட்ட பாடத்தில் முதல் மதிப்பெண் வாங்கியதற்கான பரிசுத் தொகையை இளவரனிடம் கொடுத்து பண்ணை அடிமை வேலையில் இருக்கும் கல்யாணத்தை மீட்டுவரச் சொல்கிறாள். இதுவே தாண்டவனுக்கு வருத்தமாக இருக்கிறது.
பணப் பிரச்சனையில் இருக்கும் தாண்டவத்திடம், நானும் கூத்தில் நடிக்கிறேன் அந்தப் பணத்தையும் உனக்கே தருகிறேன் என்று சொல்லி நாடக சபாவில் சேர்கிறான், இளவரசனின் மகன் கல்யாணம். அது தாண்டவனுக்கே சிறிய நெருடலைத் தருகிறது, காரணம் இளவரசனுக்குப் பிறகு கல்யாணம் இப்படியாக வளரும், தன்னுடைய இடம் பறிபோகுமே என்கிற சாதரண மனித மனநிலைதான்.
பணப் பிரச்சனை, மனக்குழப்பத்தில் இருக்கும் தாண்டவனிடம், ஜால்ரா பெருமாள்! கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவன் போல, தாண்டவன் மனதில் தனியாக ஜமா ஆரம்பிக்கும் விதையை
விசமாக விதைக்கிறான். அதற்கும் சாதகமாக உறவுக்கார ஊர்த்தலைவரிடம் அவருக்கு திருமணமாகாமல் இருக்கும் மகனுக்கு தன் மூத்த மகளை மணமுடித்து வைப்பதோடு ஒரு முடிச்சையும் போட்டு வைக்கிறார் தாண்டவன்.
இவையெல்லாம் ப்ளாஷ் பேக்காக வந்தாலும், படத்தில் தாண்டவன் பேசும் வசனமும், செயல்பாடுகளும் அவரை ஒரு வில்லனாக நமக்கு காண்பிக்கப் படுகிறது.
ஜமாவில் ஒருசில மாற்றங்கள், வேடங்கள் மாற்றி நடிக்க வேண்டுமென்று தாண்டவன் சொல்லும்போது, இளவரசன் ஏற்றுக் கொள்ளாத இடத்தில் நடைமுறைகளை மாற்றக்கூடாது என்று சொல்லும்போது அமைதியாக இருப்பவர்கள், தாண்டவன் மொட்டைப் பாறையில் வைத்து சொல்லும் இடத்தில் எகிறி அடிக்க வருகிறார்கள். எல்லாமே ஒருவித சுயநல மனநிலைதான். நமக்கு தாண்டவன், கல்யாணத்திற்கு பெண் வேடமே கொடுக்கிறான் என்பதுபோல தெரிந்தாலும், தாண்டவன் அர்ச்சுணன் வேசம் கட்டுகிறேன் சொல்லும்போது இளவரசன் மனம் ஏற்கவில்லைதானே. ஆக தாண்டவனுக்கு பெண் வேடமே தரப் பட்டிருக்கலாம்தானே. அதற்கான வன்மம் கல்யாணத்தின்மீது காட்டப்படலாம் இல்லையா?
இளவரசனை திரௌபதி வேசம் கட்டி நடிக்க தாண்டவன் அழைத்த போது, நான் வரவில்லை, நான் இல்லாமல் எப்படி நாடகம் நடத்துகிறீர்கள் என்று சவால் விட்டு தோற்று பெருங்குடிகாரனாக ஆகிறான்.
தன் தகப்பனை மதிக்காத இடத்தில் தன் காதலும், கலையின் ஆர்வமும் கண்ணை மறைத்து தாண்டவனின் நாடக சபாவில் சேர்கிறான் கல்யாணம்.
தாண்டவனுக்கு இளவரசனை பழிவாங்க, இதைவிட சந்தர்ப்பம் அமையுமா? தொடர்ந்து பெண் வேடம் கொடுத்து, சபாவிற்கு வராத நடிகர்களின் பெண் வேடமும் சேர்த்தே நடிக்க வைக்கப் படுகிறான் கல்யாணம்.
இருந்தாலும் கல்யாணத்தை தட்டிக் கொடுத்தே வேலை வாங்குகிறான்.
அனைத்திலும் சிறப்பான நடிப்பைக் காட்டி அசத்தியுள்ளார் சேத்தன்.
நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த இளவரசன் குடித்தே விரக்தியில் அரைகுறை அரிதாரம் பூசி, தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு ஆடி மொட்டைப் பாறையில் இறந்து கிடக்கிறான்.
ஒருவித மன உறுத்தலில் தாண்டவனும் அவ்வப்போது குடிக்க ஆரம்பிக்கிறான். ஆனால், அடிமையாக வில்லை. மொட்டைப் பாறையில் ஆக்ரோசமாக கல்யாணத்திடம் வாக்குவாதம் செய்யும் இடத்திலும் சரி, கடைசியில் கர்ண. வேசம் போடும் முன்பு கல்யாணத்திடம் ஆதங்கத்தில், யார்றா ஏமாத்துனா, என்று கோபத்தில் பேசிவிட்டு, அர்ச்சுணன் வேசம் கட்ட தயாராக இருந்தவனை குந்திதேவி வேசம் கட்டச் சொல்லும் இடத்தில் காட்டும் முகபாவனைகள் அபாரம்.
அதேபோல, கல்யாணம் குந்திதேவியாக நடிக்கும் இடத்தில் அருமையான ஒப்பாரிக் காட்சி. அதே நேரத்தில் ஒரு கூத்து வாத்தியாராக தாண்டவன் கர்ண வேசத்தில் இரசித்து கண்ணீர் விடும் காட்சி அமைப்பு சிறப்பு.
படத்தில் தாண்டவனை வன்மவாதியாக காட்டப்படுவது போல ஒரு மனிதன் இருந்தால், கடைசியில் ஒரு உண்மையான கலைஞனைத் தவிர வேறு யாருக்கு கண்கள் கலங்கியிருக்கும். தன் தவறை உணர்ந்து மனம் நொந்து கர்ண வேசத்திலேயே உயிர் பிரியும் நிலை வந்திருக்கும். இளவரசன் மரணத்தைவிட தாண்டவன் மரணம் மேன்மையானதுதான்.
என்னதான் தாண்டவன் கோபக்காரனாக இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத சமயத்தில் சோறூட்டி விடும் மனைவியின் அன்பைச் சம்பாதித்த ஆளாகத்தானே இருந்திருக்கிறார். என்னதான் மகள் மீது கோபமாக இருந்தாலும், மகளை படிக்க வைப்பதில் மறுக்கவில்லை.
மொத்தத்தில் இயக்குநர் பாரி இளவழகன் தாண்டவன் கதாபாத்திரத்தை மிகக் கவனமாக செதுக்கியிருக்கிறார்.
இதற்கெல்லாம் முதுகெலும்பு இசைதான். ஆஹா! இசைச் சித்தரின் இசையில் பின்னனி இசையும், பாடல்களும் அருமை! கடைசியில் திரரௌபதியின் ஒப்பாரியில் இழையோடும் வயலின் நம்மை கண்கலங்கச் செய்ததில் பெரும்பங்கு ஞானிக்கே!
வாழ்த்துகள் “ஜமா” குழுவிற்கும் இயக்குநர் பாரி இளவழகன் அவர்களுக்கும்!
இது ஒருவித வித்தியாசமான பார்வைதான் ஆனால், அனைத்துப் பக்கங்களுக்குமான நியாயத்தைப் பார்ப்பதுதானே படைப்பாளியின் கடமையும் பொறுப்பும்.