(பள்ளி மாணவி)
இராமநாதபுரம்
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்கு கருத்தினையும் தருவது கலையாகும். கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன ஆகும். சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
நிகழ்கலை வாழ்வியலோடு ஒருங்கிணைந்த ஒன்றாக வாழும் சிற்றூர் மக்களுள் கலைதான் வாழ்வே என்று எண்ணும் கலைஞர்களின் வாழ்வியல் போராட்டங்கள் எப்படியிருக்கும் என்பதை பற்றியும், தனக்கு முடியாத சூழ்நிலையிலும் அக்கலையின் மீதுள்ள ஆர்வம் குறையாது அதனை வளர்க்க நினைத்து தன் வாழ்வே கலைக்காகத்தான் என்றிருக்கும் கலைஞர்களையும் பற்றியும் பேசும் நூல்தான் ‘உன்மத்தம்’.
குடும்ப சூழ்நிலையால் உடலளவில் அக்கலையை பிரிந்திருந்தாலும் மனதளவில் தன்னுடனே இருக்கும் அக்கலையினைப் பற்ற ஏங்கும் ஒரு கலைஞனின் மனப்போராட்டத்தை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். இக்கதையின் முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் ராஜவேலு சில காரணங்களாலும் நாடக நடிகனான மூத்த மகன் விபத்தில் இறந்த துக்கத்தாலும் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட கலையை விட்டொழிக்கிறார் என்றாலும் தன்னுள் ஆக்கிரமித்த அக்கலையை தனிமையின் தாக்கத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க நினைக்கிறார். இக்கலையினை தன்னால் மேலும் வளர்க்க முடியும் என்ற எண்ணத்தோடு மனதுடன் போராட்டம் நடத்தும் ஒரு கலைஞனை ஊரும் உறவும் எப்படிப் பார்க்கும் என்பதையும், அக்கலைஞன் என்ன ஆனான் என்பதையும் பற்றிப் பேசும் இந்நாவலை நான் வாசித்து மகிழ்ந்தேன். நீங்களும் வாசிக்க வேண்டும்.
ஒரு விசயத்தை கலை நோக்கோடு அணுகி வாழ்வியலோடு கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொடுக்கும் எழுத்து பாணி கொண்ட எழுத்தாளர் பரிவை சே. குமார் அவர்களின் எழுத்தில் உருவான ‘உன்மத்தம்’ ஒரு தகவல் களஞ்சியம் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் அறிந்திராத பல செய்திகளை உள்ளடக்கி கலையின் உச்சத்தைத் தொட்டு நிற்கும் புத்தகத்தை உங்களுக்காக இந்தக் கட்டுரையின் வாயிலாகப் பரிந்துரைக்கிறேன்.
கூத்து பற்றித் தெரிந்தவர்கள் மட்டுமின்றி, அதைத் தெரியாதவர்களும் இந்நாவலை வாசித்தால் அது குறித்து அறிந்து கொள்ள முடிவதுடன் ஒரு தீராத் தாகம் கொண்ட கலைஞனுடன் ‘உலக சயனா சரணம்’ என அவன் பாடும் மேடையில் அமர்ந்து ரசித்த மகிழ்வைப் பெற முடியும்.
நன்றி.