(பள்ளி மாணவி)
இராமநாதபுரம்
'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' என்று நம் முன்னோர் கூறுவர். அவ்வாறு நாம் அறியாத பல தகவல்களையும், செய்திகளையும் கற்க ஒரு ஆரம்பப் புள்ளியாக நான் கருதும் புத்தகம் 'அறியப்படாத தமிழகம்'
நான் அறிந்த தமிழகத்தின் அறியாத தகவல்களை உள்ளடக்கி ஒரு கட்டுரைத் தொகுப்பாக நம்முன் வழங்கியிருக்கிறார் மறைந்த பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியவர் என்பதைவிட தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் முக்கியமானவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 'அழகர் கோவில்', 'பரண்', 'மரபும் புதுமையும்', 'தெய்வம் என்பதோர்', 'பண்பாட்டு அசைவுகள்', 'விடுபூக்கள்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார். திரு. தொ.பரமசிவன் அவர்கள் பெரும்பாலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதியுள்ளார். அப்படி எழுதியதில் 'பாளையங்கோட்டை வரலாறு' என்னும் நூல் இதுவரை நாம் அறிந்திராத தகவல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது.
அறியப்படாத தமிழகம் என்னும் இந்நூலில் மிகச் சிறந்த, முக்கியமான ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை,
• தமிழ்
• வீடும் வாழ்வும்
• தைப்பூசம்
• பல்லாங்குழி
• தமிழக பௌத்தம் எச்சங்கள்
• பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும்
• கறுப்பு
நம் நாட்டில் மனிதர்கள் வாழ்ந்த விதம், வாழும் முறை, பின்பற்றிய பழக்க வழக்கம், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்தையும் விரிவாகவும், தெளிவாகவும் இக்கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.
தமிழ்:
தமிழின் சிறப்பை எழுத உலக மொழிகள் போதாது, அப்படிப்பட்ட தமிழின் சிறப்புக்களை பாடியவர்களைப் பற்றியும், அவர்கள் தமிழைப் பற்றிக் கூறிய பல்வேறு செய்திகளைப் பற்றியும் இக்கட்டுரையில் எழுதியிருக்கிறார். இப்பொழுது வழக்கில் இல்லாத சொற்கள் பலவற்றை இதில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சொற்களுக்குப் பொருள் அறியாமலேயே நாம் நடைமுறையில் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். உதாரணத்திற்கு, 'காய்கறி' என்றால் காய்கறிகளைக் குறிக்கும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் 'கறி' என்ற சொல் 'மிளகை' குறிக்கிறது. அக்காலத்தில் காரத்திற்கு மிளகாயைவிட மிளகையே அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் மிளகை அதிகமாக இறைச்சியில் சேர்த்திருக்கிறார்கள், ஆகையால் இறைச்சிக்கு 'கறி' என்ற பெயரையே நாம் நடைமுறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு இன்னும் பல அறியாத சொற்களைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் நமக்கு வழக்கியிருக்கிறார்.
வீடும் வாழ்வும்:
இக்கட்டுரையில் மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதனை தன் நடையில் நமக்குப் படைத்துள்ளார். அக்காலத்தில் மக்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனி தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் இருந்தன என்ற விபரங்களை பகிர்ந்துள்ளார்.
அதேபோல் நாம் இக்காலத்தில் திருமணத்தில் பயன்படுத்தும் தாலியையும் மஞ்சளையும் பற்றி நமக்குத் தெரிந்த தகவல் குறைவு. அக்காலத்தில் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லை என்ற வழிவழிச் செய்தி ஒன்று உண்டு. அதன்பிறகு பல அறிஞர்களின் ஆய்வுகளின் பேரில் தமிழ்நாட்டில் இவ்வழக்கம் இருந்ததாக தெரிய வந்தது. தாலிகள் இனத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடும். சில தாலிகளில் உருவ பொம்மைகளை பயன்படுத்தும் வழக்கு இருந்துள்ளது, இப்போதும் இருக்கிறது. இந்தக் கட்டுரையிலும் நாம் அறியாத பல விசயங்களை எழுதியிருக்கிறார்.
தைப்பூசம்:
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்கள் எதற்காக கொண்டாடப்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது என்றாலும் கொண்டாடுவோம். அப்படியான விழாக்கள் ஏன் கொண்டாடப்படுகிறது..? எதற்காக கொண்டாடுகிறார்கள்..? என்ற வினாவுக்கான விடையை இக்கட்டுரையில் நமக்குத் தெளிவாகத் தந்திருக்கிறார்.
பண்டைய காலத்தில் இருந்த வழக்கங்கள் இப்போது மாறி இருக்கிறது. தீபாவளி என்றால் நரகாசுரன் என்னும் அசுரனை வதம் செய்த நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பதுதான் நமக்குச் சொல்லப்பட்ட கதை. உண்மையில் அந்நாளை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை இக்கட்டுரையில் நமக்குச் சொல்லியிருக்கிறார். இதேபோல் கட்டுரைத் தலைப்பான தைப்பூசம் குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார்.
பல்லாங்குழி:
அக்காலத்தில் நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்கள் இப்போது அதிகம் விளையாடப்படுவதில்லை. இதில் குறிப்பாக வயதிற்கு வந்த பெண்களுக்கு சீராக பல்லாங்குழிக் கட்டையும் சேர்த்து தருவது வழக்கில் இருந்தது, இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது. அதுபோல உரல், உலக்கை இவற்றையெல்லாம் பயன்படுத்திய நாட்களும் கரைந்து விட்டன.
தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்கள் இப்பொழுதும் சில இடங்களில் விளையாடப்படுவது ஆறுதல் அளிக்கிறது. மதிக்கத்தக்க பொருளாக இருந்த அனைத்தும் இப்போது மதிப்பில்லாத ஒன்றாக மாறியிருப்பது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இக்கட்டுரையில் நாம் அறிந்திராத இன்னும் சில விளையாட்டுகள், பொருட்கள் குறித்து எழுதியிருக்கிறார்.
தமிழக பௌத்தம்: எச்சங்கள்
சாதி, மதம் ஆகியவற்றால் ஏற்படும் குழப்பங்களைத் தீர்த்து வரும் இக்காலத்தில் மதங்களால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளையும் அதன் சிறப்பையும் இக்கட்டுரையில் விளக்கமாக எடுத்துரைக்கிறார். இவை மட்டுமல்லாமல் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியல் உலகில் சூறாவளியாகக் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' ஆகிய சொற்கள் உருவெடுத்தன. இவை 'புத்தம், தர்மம், சங்கம்' ஆகிய பௌத்த மும்மைக் கோட்பாட்டின் மறுபிறவியாகும் என்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
இதில் முக்கியமாக கருதப்படுபவர்கள் சித்தர்கள். அதிகாரங்களுக்கு கட்டுப்படாமல் சாதியாலும், சமயத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவர்கள் இவர்கள். சித்தர்கள் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். ஒவ்வொரு மதமும் அதற்கெனத் தனி சித்தர்களை கொண்டிருந்தது என்ற செய்தி நமக்குப் புதிது.
சில மொழிகள் உருவாவதற்கு இந்த மதங்களும் காரணமாக இருந்தன போன்ற தகவல்களுடன் இன்னும் பல அறியாத தகவல்களை இக்கட்டுரை மூலம் நாம் அறியத் தந்திருக்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.
பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும்:
அக்காலத்தில் பேச்சு வழக்கிற்கும் இலக்கண வழக்கிற்கும் கடுகளவு வித்தியாசம்தான் இருந்தது. ஆனால் இப்போது எழுதுவதற்கும் பேசுவதற்கும் அதே கடுகளவு கூட சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் தமிழோடு நாம் ஆங்கிலமும் கலந்து பேசுகிறோம். சில சொற்களை நாம் பயன்படுத்தும் போது ஒரு பொருளிலும், இலக்கணத்தில் அதே வேறொரு பொருளிலும் அமைந்திருப்பதைக் காண முடியும்.
தமிழை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதனுடைய தன்மை என்ன என்பதையும் மிகத் தெளிவாக இக்கட்டுரையில் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு, 'சீமை' என்ற சொல்லுக்கு 'நாடு' என்று பொருள். நாட்டுச் சக்கரையை சீமைச் சக்கரை என்று கூறமாட்டோம். அதேபோல் சீமைக் கருவேல் என்பதனை நாட்டுக் கருவேல் எனப் பயன்படுத்துவதில்லை என்பது போன்ற பல விசயங்களை எடுத்துக்காட்டுகளுடன் மிகத் தெளிவாக இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
கறுப்பு:
வண்ணம் என்ற சொல் அழகு, இசை, ஒழுங்கு என்ற பொருள்களைத் தந்தது. ஆனால் அதுவே இக்காலத்தில் நிறவெறியாக உருவெடுத்துள்ளது. கறுப்பின மக்கள் வெள்ளைக்கார மக்களிடம் பெற்ற அவமானங்களை இது நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல் கறுப்பாக இருப்பவன் கீழ்சாதிக்காரன் என்றெல்லாம் நிறவெறி உருவெடுத்தது, ஆனால் உண்மையில் கறுப்பு என்பது அழகுக்குரிய நிறமாகவும், கறுப்பு என்றால் ‘கருத்த’ என்ற பொருளிலும் அமைந்து வருகிறது.
முடிவுரை:
இவ்வாறு பல்வேறு புதிய செய்திகளை உள்ளடக்கி, என்னளவில் இது ஒரு சிறந்த கட்டுரை நூலாக உள்ளது. இதிலிருக்கும் செய்தியினை வேறிடத்தில் தேடி அலைவதைவிட தேடுபவர்களுக்கு நம்மை பதில் கூற வைக்கும் நூலாகத் திகழ்கிறது வரலாற்று ஆய்வாளர், முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம்.